Monday, 9 December 2013

என்றென்றும் வாழ்வது எப்படி

என்றென்றும் வாழ்வது எப்படி

இந்தக் குட்டிப் பெண்ணும் அவளுடைய நண்பர்களும் என்ன வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நீ சொல்ல முடியுமா? ஆம், நீ வாசித்துக் கொண்டிருக்கிற இந்தப் புத்தகத்தை—என்னுடைய பைபிள் கதை புத்தகத்தை—வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, நீ வாசித்துக் கொண்டிருக்கிற கதையைத்தான்—“என்றென்றும் வாழ்வது எப்படி” என்ற இதே கதையைத்தான்—அவர்களும் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். 
ஒரு பையன் படிக்கிறான்

அவர்கள் என்ன கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா? முதலாவதாக, நாம் என்றென்றும் வாழ வேண்டுமானால் யெகோவாவையும் அவருடைய குமாரனான இயேசுவையும் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘என்றென்றும் வாழ்வதற்கான வழி, ஒரே மெய்க் கடவுளையும் அவர் பூமிக்கு அனுப்பின அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்துவையும் பற்றிக் கற்றுக் கொள்வதே.’
யெகோவா தேவனையும் அவருடைய குமாரனான இயேசுவையும் பற்றி நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்? ஒரு வழியானது என்னுடைய பைபிள் கதை புத்தகத்தை முதலிலிருந்து கடைசி வரையாக வாசிப்பதன் மூலமாகும். இது யெகோவாவையும் இயேசுவையும் பற்றி நிறைய சொல்கிறதல்லவா? அதோடு, அவர்கள் செய்திருக்கிற காரியங்களையும் இன்னும் செய்யப் போகிற காரியங்களையும் பற்றி ஏராளமான விஷயங்களைச் சொல்கிறது. ஆனால் இந்தப் புத்தகத்தை வெறுமென வாசித்தால் போதாது, அதைவிட அதிகத்தை நாம் செய்ய வேண்டும்.
தரையில் இருக்கிற இன்னொரு புத்தகத்தைப் பார்க்கிறாயா? அது பைபிள். இந்தப் புத்தகத்தின் கதைகளுக்கு அடிப்படையாய் இருக்கிற பைபிள் வசனங்களை யாரையாவது வாசித்துக் காட்டச் சொல். நாம் எல்லோரும் யெகோவாவுக்கு சரியான முறையில் சேவை செய்வதற்கும் நித்திய ஜீவனைப் பெறுவதற்கும் தேவையான முழு தகவலையும் பைபிள் நமக்குக் கொடுக்கிறது. அதனால் அடிக்கடி பைபிள் படிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்.
என்றாலும் யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிக் கற்றுக்கொள்வது மாத்திரமே போதாது. அவர்களையும் அவர்களுடைய போதகங்களையும் பற்றி நாம் ரொம்பவே அறிந்திருந்தாலும் நித்திய ஜீவன் நமக்கு கிடைக்காமல் போய்விடலாம். அப்படியானால் வேறு எதுவும் நமக்குத் தேவைப்படுகிறதென்று உனக்குத் தெரியுமா?
நாம் கற்றுக்கொள்கிற காரியங்களின்படி வாழ வேண்டும். யூதாஸ்காரியோத்தை உனக்கு நினைவிருக்கிறதா? இயேசு தேர்ந்தெடுத்த 12 அப்போஸ்தலர்களில் இவனும் ஒருவன். யூதாஸுக்கு யெகோவாவையும் இயேசுவையும் பற்றி ஏராளமான அறிவு இருந்தது. என்றாலும் அவனுக்கு என்ன நடந்தது? கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவன் சுயநலவாதியானான். இயேசுவை 30 வெள்ளிக் காசுகளுக்கு காட்டிக் கொடுத்தான். அதனால் யூதாஸுக்கு நித்திய ஜீவன் கிடைக்காது.
  நாம் படித்த கேயாசி என்பவனை உனக்கு நினைவிருக்கிறதா? தனக்குச் சொந்தமில்லாத சில உடைகளையும் பணத்தையும் அடைய அவன் ஆசைப்பட்டான். அதனால் ஒரு பொய் சொன்னான். அதற்காக யெகோவா அவனைத் தண்டித்தார். நாம் அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் போனால் நம்மையும்கூட அவர் தண்டிப்பார்.
என்றாலும், யெகோவாவுக்கு உண்மையாய் சேவை செய்த பல நல்ல ஆட்களும் இருக்கிறார்கள். அவர்களைப் போல் இருக்க நாம் ஆசைப்படுகிறோம் தானே? சிறுவனாகிய சாமுவேல், நாம் பின்பற்றுவதற்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறான். நாம் பார்த்த பிரகாரம், ஆசரிப்புக் கூடாரத்தில் அவன் யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தபோது அவனுக்கு நான்கு அல்லது ஐந்து வயதுதான் ஆகியிருந்தது இல்லையா? அப்படியானால், ரொம்ப சின்னப் பிள்ளையாக இருந்தாலும்கூட யெகோவாவுக்கு நீ சேவை செய்யலாம். 
பைபிள்

நாமெல்லாரும் பின்பற்ற விரும்புகிற நபர் இயேசு கிறிஸ்துதான்.  காட்டப்பட்டபடி அவர் சிறு பையனாக இருந்தபோதுகூட, ஆலயத்தில் மற்றவர்களிடம் பரலோகத் தகப்பனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய முன்மாதிரியை நாம் பின்பற்றுவோமாக. நம்முடைய அருமையான கடவுள் யெகோவாவையும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவையும் பற்றி நம்மால் எவ்வளவு பேருக்கு சொல்ல முடியுமோ அவ்வளவு பேருக்கு சொல்வோமாக. இதையெல்லாம் செய்து வந்தால், கடவுளுடைய புதிய பரதீஸ் பூமியில் நாம் என்றென்றும் வாழ முடியும்.
யோவான் 17:3; சங்கீதம் 145:1-21.


கேள்விகள்

  • என்றென்றும் வாழ வேண்டுமென்றால் நாம் எதைப் பற்றி தெரிந்துகொள்ள வேணடும்?
  • இந்தப் படத்திலுள்ள குட்டிப் பெண்ணையும் அவளுடைய நண்பர்களையும் போல யெகோவா தேவனையும் இயேசுவையும் பற்றி நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
  • இந்தப் படத்தில் பார்க்கிற இன்னொரு புத்தகம் என்ன, அதை நாம் ஏன் அடிக்கடி வாசிக்க வேண்டும்?
  • என்றென்றும் வாழ வேண்டுமானால் யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிக் கற்றுக்கொள்வதோடு வேறு எதுவும் தேவை?
  • கதை 69-லிருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்?
  • கதை 55-ல் பார்த்த குட்டிப் பையனான சாமுவேலின் சிறந்த உதாரணம் நமக்கு என்ன காட்டுகிறது?
  • இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம், அப்போது எதிர்காலத்தில் நம்மால் என்ன செய்ய முடியும்?

கூடுதல் கேள்விகள்

  • யோவான் 17:3-ஐ வாசி. யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றி அறிந்துகொள்வதற்கு வெறுமனே விஷயங்களை மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது என்பதை பைபிள் வசனங்கள் எப்படிக் காட்டுகின்றன? (மத். 7:21; யாக். 2:18-20; 1 யோ. 2:17)
  • சங்கீதம் 145:1-21-ஐ வாசி. (அ) யெகோவாவைத் துதிப்பதற்கான அநேக காரணங்களில் சில யாவை? (சங். 145:8-11; வெளி. 4:11)
    (ஆ) யெகோவா எப்படி ‘எல்லோருக்குமே நல்லவராய்’ இருக்கிறார், இது நம்மை எப்படி அவரிடம் இன்னும் நெருங்கி வரச் செய்கிறது? (சங். 145:9, NW; மத். 5:43-45)
    (இ) யெகோவாவை இருதயப்பூர்வமாக நேசித்தால் நாம் என்ன செய்வோம்? (சங். 119:171, 172, 175; 145:11, 12, 21)

பூமியில் ஒரு புதிய பரதீஸ்

பூமியில் ஒரு புதிய பரதீஸ்

இந்தப் படத்திலுள்ள பெரிய பெரிய மரங்களையும், வண்ண வண்ண பூக்களையும் உயர உயரமான மலைகளையும் பார். எவ்வளவு அழகாக இருக்கிறது இல்லையா? ஒரு மான் இந்தச் சின்ன பையனுடைய கையிலிருந்து எப்படி வாங்கிச் சாப்பிடுகிறது பார். அந்தச் சிங்கங்களையும் பசும்புல்லில் நின்றுகொண்டிருக்கிற அந்தக் குதிரைகளையும் பார். இதுபோன்ற இடத்தில் வீடு கட்டி இருக்க ஆசைப்படுகிறாய் தானே?
பரதீஸாக மாற்றப்பட்ட பூமியில் நீ என்றென்றுமாக வாழ வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். இன்று ஜனங்களுக்கு இருக்கும் எந்த வலியும் வேதனையும் உனக்கு வரக்கூடாது என அவர் நினைக்கிறார். அந்தப் புதிய பரதீஸில் வாழப் போகிறவர்களுக்கு பைபிள் கொடுக்கிற வாக்கு இதுவே: ‘கடவுள் அவர்களோடு கூட இருப்பார். மரணமோ, அழுகையோ, வேதனையோ இனி இருக்காது, பழைய காரியங்களெல்லாம் ஒழிந்து போய்விட்டன.’
இந்த அற்புத மாற்றம் கண்டிப்பாக நடக்கும்படி இயேசு பார்த்துக் கொள்வார். இது எப்பொழுது நடக்குமென்று உனக்குத் தெரியுமா? ஆம், எல்லாக் கெட்ட காரியங்களையும் கெட்ட ஜனங்களையும் நீக்கிவிட்டு பூமியை அவர் சுத்தமாக்கிய பின்பே அது நடக்கும். இயேசு பூமியில் இருக்கும்போது எல்லா வகையான நோய்களிலிருந்தும் மக்களைச் சுகப்படுத்தினார், மரித்தோரையும்கூட உயிர்த்தெழுப்பினார் இல்லையா?
அதையெல்லாம் அவர் ஏன் செய்தார் தெரியுமா? கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக ஆட்சி செய்யும்போது பூமி முழுவதிலும் தாம் என்ன செய்யப் போகிறார் என்பதைக் காட்டவே அவர் அதையெல்லாம் செய்தார். சற்று கற்பனை செய்து பார், பூமியில் அந்தப் புதிய பரதீஸ் எவ்வளவு அருமையாக இருக்கும்! இயேசு, தாம் தேர்ந்தெடுக்கிற சிலரோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்து கொண்டிருப்பார். அந்த ராஜாக்கள் பூமியிலுள்ள ஒவ்வொருவரையும் கவனித்துக்கொள்வார்கள், எல்லோரையும் சந்தோஷமாக வாழ வைப்பார்கள். அந்தப் புதிய பரதீஸில் கடவுள் கொடுக்கப் போகிற நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? அதை இப்போது பார்க்கலாம்.
வெளிப்படுத்துதல் 21:3, 4; 5:9, 10; 14:1-3.
ஒரு பரதீஸ் காட்சி



கேள்விகள்

  • பூமி ஒரு பரதீஸாக மாறும்போது நாம் எதையெல்லாம் அனுபவித்து மகிழ்வோம் என பைபிள் காட்டுகிறது?
  • பரதீஸில் வாழ்வோருக்கு பைபிள் என்ன வாக்குக் கொடுக்கிறது?
  • இந்த அற்புத மாற்றம் எப்போது நடக்கும்படி இயேசு பார்த்துக் கொள்வார்?
  • கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக ஆட்சி செய்யும்போது தாம் என்ன செய்வார் என்பதைக் காட்டுவதற்காக பூமியில் இருந்தபோது இயேசு என்ன செய்தார்?
  • பரலோகத்திலிருந்து இயேசுவும் அவருடன் ஆட்சி செய்பவர்களும் பூமியை ஆளும்போது அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்?

கூடுதல் கேள்விகள்

  • வெளிப்படுத்துதல் 5:9, 10-ஐ வாசி. ஆயிர வருட ஆட்சியின்போது பூமியை ஆளுபவர்கள் அனுதாபமும் இரக்கமுமுள்ள ராஜாக்களும் ஆசாரியர்களுமாய் இருப்பார்கள் என நாம் ஏன் உறுதியாக நம்பலாம்? (எபே. 4:20-24; 1 பே. 1:7; 3:8; 5:6-10)
  • வெளிப்படுத்துதல் 14:1-3-ஐ வாசி. 1,44,000 பேரின் நெற்றிகளில் பிதாவின் பெயரும் ஆட்டுக்குட்டியானவரின் பெயரும் எழுதப்பட்டிருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? (1 கொ. 3:23; 2 தீ. 2:19; வெளி. 3:12)

எல்லாக் கெட்ட காரியங்களுக்கும் முடிவு

எல்லாக் கெட்ட காரியங்களுக்கும் முடிவு

இங்கே நீ என்ன பார்க்கிறாய்? வெள்ளை குதிரைகள் மீது ஒரு படை வந்துகொண்டிருக்கிறது. ஆனால் அந்தக் குதிரைகள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் கவனி. இந்தக் குதிரைகள் மேகங்களின் மேல் பரலோகத்திலிருந்து பாய்ந்து வந்து கொண்டிருக்கின்றன! இவை நிஜமான குதிரைகளா? 
பரலோகத்தில் இயேசு ராஜாவாக இருக்கிறார்

இல்லை, இவை நிஜமான குதிரைகள் இல்லை. இது நமக்கு எப்படித் தெரியுமென்றால், குதிரைகள் மேகங்களின் மேல் ஓட முடியாதல்லவா? ஆனால் பரலோகத்தில் குதிரைகள் இருப்பதாக பைபிள் சொல்கிறது. ஏன் என்று உனக்குத் தெரியுமா?
ஏனென்றால் பூமியில் ஒரு காலத்தில் போர் செய்வதற்கு குதிரைகள் ஏராளமாய் உபயோகப்படுத்தப்பட்டன. ஆகவே பரலோகத்திலிருந்து ஆட்கள் குதிரைகள் மீது வருவது போல பைபிள் சொல்வது பூமியிலுள்ள ஜனங்களுடன் கடவுள் ஒரு போர் செய்ய வேண்டியிருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத்தான். அந்தப் போரின் பெயர் என்னவென்று தெரியுமா? அது அர்மகெதோன். அந்தப் போர் பூமியில் எல்லாக் கெட்ட காரியங்களையும் அழிப்பதற்கே தொடுக்கப்படுகிறது.
அந்த அர்மகெதோன் போரில் தலைமை வகிக்கப் போகிறவர் இயேசுவே. யெகோவா தம்முடைய அரசாங்கத்திற்கு ராஜாவாக இயேசுவையே தேர்ந்தெடுத்தார் என்பது உனக்கு நினைவிருக்கலாம். அதனால்தான் இயேசுவின் தலையில் ராஜ கிரீடம் இருக்கிறது. அவரிடமிருக்கிற அந்த வாள் கடவுளுடைய எதிரிகளையெல்லாம் அவர் கொன்று போடுவார் என்று காட்டுகிறது. எல்லாக் கெட்ட ஆட்களையும் கடவுள் அழிப்பார் என்பதைப் பற்றி நாம் ஆச்சரியப்பட வேண்டுமா?
கதை 10-ஐ திருப்பிப் பார். அங்கே நீ என்ன பார்க்கிறாய்? கெட்ட ஜனங்களை அழித்த அந்தப் பெரிய ஜலப்பிரளயத்தைப் பார்க்கிறாய் அல்லவா? அந்த ஜலப்பிரளயத்தை யார் வர வைத்தது? யெகோவா தேவனே. இப்போது கதை 15-ஐப் பார். அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? யெகோவா அனுப்பிய நெருப்பால் சோதோமும் கொமோராவும் அழிக்கப்படுகின்றன.
கதை 33-க்குத் திருப்பு. எகிப்தியரின் குதிரைகளுக்கும் யுத்த இரதங்களுக்கும் என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று பார். தண்ணீர் திடீரென்று அவர்கள் மேல் புரண்டு மூழ்கும்படி செய்தவர் யார்? யெகோவாவே. தம்முடைய ஜனத்தைப் பாதுகாப்பதற்காக அவர் அதைச் செய்தார். கதை 76-ஐப் பார். யெகோவா, தம்முடைய ஜனமான இஸ்ரவேலரையும் அழித்தார்; ஆம், அவர்கள் கெட்ட காரியங்கள் செய்ததால் அவர்களை அழித்துப் போட்டதை அதில் நீ பார்க்கலாம்.
எனவே, பூமியில் எல்லாக் கெட்ட காரியங்களுக்கும் முடிவைக் கொண்டு வருவதற்காக யெகோவா தம்முடைய பரலோகப் படையை அனுப்பப் போவதைக் குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதே இல்லை. ஆனால் அதன் பிறகு நிலைமை எப்படி இருக்குமென்று கொஞ்சம் யோசித்துப் பார்! இந்தப் பக்கத்தைத் திருப்பு, நாம் அதைப் பார்க்கலாம்.
வெளிப்படுத்துதல் 16:16; 19:11-16.


கேள்விகள்

  • பரலோகத்தில் குதிரைகள் இருப்பதாக பைபிள் ஏன் சொல்கிறது?
  • பூமியிலுள்ள கெட்ட ஆட்களுடன் கடவுள் தொடுக்கப் போகிற அந்தப் போரின் பெயர் என்ன, எதற்காக அந்தப் போர் தொடுக்கப்படுகிறது?
  • இந்தப் படத்தில் பார்க்கிறபடி, யார் அந்தப் போரில் தலைமை வகிப்பார், அவர் ஏன் கிரீடம் அணிந்திருக்கிறார், அவரிடமுள்ள வாள் எதை அர்த்தப்படுத்துகிறது?
  • கதைகள் 10, 15, 33-ல் பார்த்தபடி, கெட்ட ஆட்களைக் கடவுள் அழிப்பார் என்பதைப் பற்றி நாம் ஏன் ஆச்சரியப்பட வேண்டியதில்லை?
  • கெட்ட ஆட்கள் கடவுளை வணங்குவதாக சொன்னாலும் அவர்களைக் கடவுள் அழித்துவிடுவார் என்பதை 36-ம் கதையும் 76-ம் கதையும் எப்படிக் காட்டுகின்றன?

கூடுதல் கேள்விகள்

  • வெளிப்படுத்துதல் 19:11-16-ஐ வாசி. (அ) வெள்ளை குதிரையில் சவாரி செய்பவர் இயேசு கிறிஸ்துவே என்பதை வேதவசனங்கள் எப்படித் தெளிவாகக் காட்டுகின்றன? (வெளி. 1:5; 3:14; 19:11; ஏசா. 11:4)
    (ஆ) இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை இயேசு அணிந்திருப்பது அவருடைய வெற்றி முழுமையானதாக இருக்கும் என்பதை எப்படி உறுதிப்படுத்துகிறது? (வெளி. 14:18-20; 19:13; ஏசா. 63:1-6)
    (இ) இயேசு சவாரி செய்கிற வெள்ளைக் குதிரைக்குப் பின்னால் வருகிற சேனைகளில் யாரும் இருப்பர்? (வெளி. 12:7; 19:14; மத். 25:31, 32)

(8) பைபிள் முன்னறிவிப்பது உண்மையாய் நடக்கிறது

பைபிள் முன்னறிவிப்பது உண்மையாய் நடக்கிறது

பைபிள், கடந்த காலத்தில் நடந்தவற்றைப் பற்றிய உண்மை கதைகளைச் சொல்வதோடு, எதிர்காலத்தில் நடக்கப் போவதைப் பற்றியும் சொல்கிறது. ஆனால் மனிதர்களால் எதிர்காலத்தைப் பற்றி சொல்ல முடியாது. அதனால்தான் பைபிள் கடவுளால் கொடுக்கப்பட்டதென்று நாம் தெரிந்துகொள்கிறோம். எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
 பரதீஸ் காட்சி
கடவுளுடைய ஒரு பெரிய போரைப் பற்றி அது சொல்கிறது. இந்தப் போரின்போது பூமியிலிருந்து எல்லாக் கெட்ட காரியங்களையும் கெட்ட ஜனங்களையும் கடவுள் நீக்கிப்போடுவார், தம்மைச் சேவிக்கிறவர்களையோ அவர் பாதுகாப்பார். கடவுளுடைய ஊழியர்கள் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அனுபவிக்குமாறு ராஜாவான இயேசு கிறிஸ்து பார்த்துக்கொள்வார்; அதுமட்டுமல்ல, இனி அவர்களுக்கு எந்த வியாதியோ மரணமோ வராதபடியும் பார்த்துக்கொள்வார்.
இந்தப் பூமியைக் கடவுள் ஒரு புதிய பரதீஸாக மாற்றப் போகிறார் என்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் இல்லையா? ஆனால் இந்தப் பரதீஸில் நாம் வாழ வேண்டுமானால் நாம் ஏதோவொன்றைச் செய்ய வேண்டும். இந்தப் புத்தகத்தின் கடைசி கதையில், கடவுள் தம்மைச் சேவிக்கிறவர்களுக்கு வைத்திருக்கிற அந்த அதிசயமான காரியங்களை அனுபவித்து மகிழ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வோம். அதனால் பகுதி 8-ஐ வாசித்து எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்.


ரோமாபுரியில் பவுல்

ரோமாபுரியில் பவுல்

பவுலின் கைகளில் கட்டப்பட்டுள்ள அந்தச் சங்கிலியைப் பார், அதோ, அவரைக் காவல் காக்கும் அந்த ரோமப் படைவீரனும் அங்கு இருக்கிறான். பவுல் ரோமாபுரியில் கைதியாக இருக்கிறார். தன்னை என்ன செய்வதென்று ரோம இராயன் தீர்மானிக்கும் வரை அவர் அங்கேயே காத்திருக்க வேண்டியிருக்கிறது. கைதியான அவரைப் போய் பார்க்க ஆட்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
பவுல் ரோமாபுரிக்குப் போய்ச் சேர்ந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, சில யூத தலைவர்கள் தன்னை வந்து பார்க்குமாறு சொல்லி அனுப்புகிறார். அதன்படி, ரோமாபுரியிலுள்ள பல யூதர்கள் வருகிறார்கள். பவுல் அவர்களுக்கு இயேசுவைப் பற்றியும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் பிரசங்கிக்கிறார். பவுல் சொல்வதைச் சிலர் நம்பி கிறிஸ்தவர்களாக ஆகிறார்கள், மற்றவர்கள் நம்புவதில்லை. 
சிறையில் பவுல்

அதோடு, தன்னைக் காவல் காக்கிற வெவ்வேறு படைவீரர்களிடமும் பவுல் பிரசங்கிக்கிறார். தான் இங்கே கைதியாக வைக்கப்பட்ட இரண்டு வருஷங்களில் முடிந்தளவு எல்லோருக்கும் பவுல் பிரசங்கிக்கிறார். இதன் விளைவாக, இராயனுடைய வீட்டாரும் ராஜ்ய நற்செய்தியைக் கேட்கிறார்கள். அப்படிக் கேட்டவர்களில் சிலர் கிறிஸ்தவர்களாக ஆகிறார்கள்.
மேஜையில் எழுதிக்கொண்டிருக்கிற இவர் யார்? உன்னால் ஊகிக்க முடிகிறதா? ஆம், பவுலைப் பார்க்க வந்திருந்த தீமோத்தேயுவே அவர். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிப் பிரசங்கித்ததற்காக அவரும் சிறையில் இருந்திருந்தார். ஆனால் மறுபடியும் விடுதலை ஆகியிருக்கிறார். இங்கே பவுலுக்கு உதவி செய்ய இப்போது வந்திருக்கிறார். அவர் என்ன எழுதுகிறார் என்று உனக்குத் தெரியுமா? நாம் பார்க்கலாம்.
110-ம் கதையில் குறிப்பிடப்பட்ட பிலிப்பி, எபேசு என்ற பட்டணங்கள் உனக்கு நினைவிருக்கிறதா? இந்தப் பட்டணங்களில் கிறிஸ்தவ சபைகளைத் தொடங்க பவுல் உதவி செய்தார். இப்போது சிறையில் இருந்து அந்தக் கிறிஸ்தவர்களுக்கு பவுல் கடிதங்களை எழுதுகிறார். இந்தக் கடிதங்கள் பைபிளில் இருக்கின்றன, அவை எபேசியர், பிலிப்பியர் என்று அழைக்கப்படுகின்றன. பிலிப்பியிலுள்ள தங்கள் கிறிஸ்தவ நண்பர்களுக்கு என்னென்ன எழுத வேண்டுமென்று பவுல் இப்போது தீமோத்தேயுவுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் பிலிப்பியர் பவுலிடம் மிகவும் அன்பாக இருந்திருக்கிறார்கள். இங்கே சிறையிலிருக்கும் அவருக்கு ஒரு பரிசை அனுப்பினார்கள். அதனால் பவுல் அவர்களுக்கு நன்றி சொல்லி எழுதுகிறார். இந்தப் பரிசைக் கொண்டு வந்தவர் எப்பாப்பிரோதீத்து. ஆனால் அவர் ரொம்பவும் உடம்பு சரியில்லாமல் சாகும் நிலைக்கு வந்துவிட்டார். இப்போது சுகமாகி திரும்ப வீட்டுக்குப் போக தயாராக இருக்கிறார். பிலிப்பிக்குத் திரும்பும்போது, பவுலும் தீமோத்தேயுவும் கொடுத்தனுப்புகிற இந்தக் கடிதத்தை அவர் எடுத்துக்கொண்டு போவார்.
சிறையில் இருக்கும்போது பவுல் மேலும் இரண்டு கடிதங்களை எழுதுகிறார், இவை பைபிளில் இருக்கின்றன. ஒன்று கொலோசெ பட்டணத்திலுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டது. அதற்கு என்ன பெயர் என்று உனக்குத் தெரியுமா? அது கொலோசெயர் என்றழைக்கப்படுகிறது. மற்றொன்று பவுலின் நெருங்கிய நண்பரான பிலேமோனுக்கென்றே எழுதப்பட்ட ஒரு கடிதம், இவரும்கூட கொலோசெயில் வாழ்கிறார். இந்தக் கடிதம் பிலேமோனின் வேலைக்காரனான ஒநேசிமுவைப் பற்றியது.
ஒநேசிமு பிலேமோனிடமிருந்து ரோமாபுரிக்கு ஓடி வந்துவிட்டிருந்தார். பவுல் இங்கே சிறையில் இருப்பதை ஒநேசிமு எப்படியோ தெரிந்து கொண்டு அவரைப் பார்க்க வந்தார். அப்போது பவுல் ஒநேசிமுவுக்கு பிரசங்கித்தார். சீக்கிரத்தில் ஒநேசிமுவும் கிறிஸ்தவரானார். இப்பொழுது ஒநேசிமு தான் ஓடி வந்ததைப் பற்றி வருத்தப்படுகிறார். அதனால் இந்தக் கடிதத்தில் பிலேமோனுக்கு பவுல் என்ன எழுதுகிறார் என்று உனக்குத் தெரியுமா?
ஒநேசிமுவை மன்னிக்கும்படி பிலேமோனை பவுல் கேட்டுக்கொள்கிறார்: ‘நான் அவரை உன்னிடம் திரும்ப அனுப்புகிறேன். ஆனால் இப்போது அவர் உன்னுடைய வேலைக்காரன் மட்டும் அல்ல. ஒரு நல்ல கிறிஸ்தவ சகோதரனும்கூட’ என்று பவுல் எழுதுகிறார். ஒநேசிமு கொலோசெக்குத் திரும்பிப்போனபோது இந்த இரண்டு கடிதங்களையும், அதாவது கொலோசெயருக்கும் பிலேமோனுக்கும் எழுதப்பட்ட கடிதங்களைக் கொண்டு போகிறார். தன்னுடைய வேலைக்காரன் கிறிஸ்தவராகி விட்டார் என்று பிலேமோனுக்கு தெரிய வந்ததும் அவர் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.
பிலிப்பியருக்கும் பிலேமோனுக்கும் உண்மையிலேயே ஒரு நல்ல செய்தியை பவுல் எழுதுகிறார். ‘நான் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புகிறேன், ஆனால் சீக்கிரத்தில் நானும்கூட உங்களிடம் வருவேன்’ என்று பிலிப்பியருக்கு எழுதுகிறார். பிலேமோனுக்கு எழுதுகையில், ‘அங்கே தங்குவதற்காக எனக்கு ஓர் இடத்தை தயார் செய்’ என்று எழுதுகிறார்.
பவுல் விடுதலையானதும் பல இடங்களிலுள்ள கிறிஸ்தவ சகோதரர் சகோதரிகளைப் போய்ப் பார்க்கிறார். ஆனால் பிற்பாடு பவுல் மறுபடியும் ரோமாபுரியில் கைது செய்யப்படுகிறார். இந்தத் தடவை தான் கொல்லப்படுவார் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால் தீமோத்தேயுவுக்கு கடிதம் எழுதி சீக்கிரமாய் வருமாறு அவரைக் கேட்கிறார். ‘நான் கடவுளுக்கு உண்மையுள்ளவனாய் இருந்திருக்கிறேன். கடவுள் எனக்கு நிச்சயம் பலனளிப்பார்’ என்று பவுல் எழுதுகிறார். பவுல் கொல்லப்பட்டு ஒரு சில வருஷங்களுக்குப் பிறகு, எருசலேம் மறுபடியுமாக அழிக்கப்படுகிறது. இந்த முறை ரோமர்களால் அழிக்கப்படுகிறது.
பைபிளில் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. வெளிப்படுத்துதல் புத்தகம் உட்பட பைபிளின் கடைசி புத்தகங்களை அப்போஸ்தலனான யோவான் எழுதும்படி யெகோவா தேவன் செய்கிறார். பைபிள் புத்தகமான வெளிப்படுத்துதல் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்கிறது. அப்படியென்றால் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது? அதைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.
அப்போஸ்தலர் 28:16-31; பிலிப்பியர் 1:13; 2:19-30; 4:18-23; எபிரெயர் 13:23; பிலேமோன் 1-25; கொலோசெயர் 4:7-9; 2 தீமோத்தேயு 4:7-9.


கேள்விகள்

  • ரோமாபுரியில் கைதியாக இருக்கிற பவுல் யாரிடம் பிரசங்கிக்கிறார்?
  • இந்தப் படத்தில், மேஜையில் எழுதிக்கொண்டிருப்பவர் யார், பவுலுக்காக அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
  • எப்பாப்பிரோதீத்து என்பவர் யார், அவர் பிலிப்பிக்குத் திரும்பும்போது எதைக் எடுத்துக்கொண்டு போகிறார்?
  • பவுல் தன்னுடைய நெருங்கிய நண்பரான பிலேமோனுக்கு ஏன் கடிதம் எழுதுகிறார்?
  • பவுல் விடுதலையானதும் என்ன செய்கிறார், பிற்பாடு அவர் என்ன செய்யப்படுகிறார்?
  • பைபிளின் கடைசி புத்தகங்களை எழுதுவதற்கு யெகோவா யாரைப் பயன்படுத்துகிறார், வெளிப்படுத்துதல் புத்தகம் எதைப் பற்றி சொல்கிறது?

கூடுதல் கேள்விகள்

  • அப்போஸ்தலர் 28:16-31; பிலிப்பியர் 1:13-ஐ வாசி. ரோமாபுரியில் கைதியாக இருந்தபோது பவுல் தன்னுடைய நேரத்தை எப்படிப் பயன்படுத்தினார், அவரது உறுதியான விசுவாசத்தால் கிறிஸ்தவ சபையில் இருந்தவர்கள் என்ன செய்யத் தூண்டப்பட்டார்கள்? (அப். 28:23, 30; பிலி. 1:14)
  • பிலிப்பியர் 2:19-30-ஐ வாசி. தீமோத்தேயுவையும் எப்பாப்பிரோதீத்துவையும் பற்றி பெருமிதத்துடன் பவுல் சொன்ன வார்த்தைகள் யாவை, பவுலின் முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (பிலி. 2:20, 22, 25, 29, 30; 1 கொ. 16:18; 1 தெ. 5:12, 13)
  • பிலேமோன் 1-25-ஐ வாசி. (அ) எதன் அடிப்படையில் சரியானதைச் செய்யும்படி பிலேமோனை பவுல் அறிவுறுத்தினார், இன்று மூப்பர்களுக்கு இது எவ்வாறு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது? (பிலே. 9; 2 கொ. 8:8; கலா. 5:13)
    (ஆ) சபையிலிருந்த மற்றவர்களின் மனசாட்சியை பவுல் மதித்தார் என்பதை பிலேமோன் 13, 14 வசனங்கள் எப்படிக் காட்டுகின்றன? (1 கொ. 8:7, 13; 10:31-33)
  • இரண்டு தீமோத்தேயு 4:7-9-ஐ வாசி. இறுதிவரை உண்மையோடு நிலைத்திருந்தால் யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார் என அப்போஸ்தலன் பவுல் உறுதியாக நம்பியது போல நாமும் எப்படி நம்பலாம்? (மத். 24:13; எபி. 6:10)

ஒரு தீவில் கப்பற்சேதம்

ஒரு தீவில் கப்பற்சேதம்

அதோ பார்! அந்தக் கப்பல் ஆபத்தில் இருக்கிறது! துண்டு துண்டாக உடைந்து கொண்டிருக்கிறது! தண்ணீருக்குள் குதித்திருக்கிற அந்த ஆட்களை உன்னால் பார்க்க முடிகிறதா? சிலர் ஏற்கெனவே கரைக்கு நீந்தி வந்துவிட்டார்கள். அங்கே வருவது பவுலா? அவருக்கு என்ன நடந்துவிட்டது? நாம் பார்க்கலாம்.
கப்பற்சேதத்திலிருந்து தப்பியவர்கள்
கப்பற்சேதத்திலிருந்து தப்பியவர்கள்

பவுல் இரண்டு ஆண்டுகளுக்கு செசரியாவில் கைதியாக வைக்கப்பட்டிருந்தார் இல்லையா? அதன் பிறகு அவரும் கைதிகள் சிலரும் ஒரு கப்பலில் ஏற்றப்படுகிறார்கள், அவர்கள் ரோமாபுரிக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். கப்பல் கிரேத்தா தீவுக்குப் பக்கத்தில் போகும்போது, ஒரு பயங்கர புயல் காற்று அவர்களைத் தாக்குகிறது. காற்று ரொம்ப ரொம்ப பலமாக அடிப்பதால் அந்த ஆட்களால் கப்பலை சரியான திசையில் செலுத்த முடியவில்லை. பகலில் சூரியனையும் இரவில் நட்சத்திரங்களையும் அவர்களால் பார்க்க முடியவில்லை. இப்படியே பல நாட்கள் செல்கிறது. கடைசியில், அவர்கள் எல்லோருக்கும் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையே இல்லாமல் போய்விடுகிறது.
அந்தச் சமயத்தில் பவுல் எழுந்து நின்று: ‘உங்களில் யாருமே உயிரை இழக்க மாட்டீர்கள். கப்பல் மாத்திரமே சேதமாகும். ஏனென்றால் நேற்று ராத்திரி கடவுளுடைய தூதன் ஒருவர் என்னிடம் வந்து, “பவுலே, பயப்படாதே! ரோம ஆட்சியாளனான இராயனுக்கு முன் நீ நிற்க வேண்டும். உன்னோடு பயணம் செய்கிற எல்லோரையும் கடவுள் காப்பாற்றுவார்” என்று சொன்னார்’ என்கிறார்.
புயல் தொடங்கி 14-வது நாள் நடு ராத்திரியில், தண்ணீரின் ஆழம் குறைந்து கொண்டே வருவதைக் கப்பலோட்டிகள் கவனிக்கிறார்கள்! இருளில் பாறைகள் எவற்றிலாவது கப்பல் மோதி விடுமோ என்ற பயத்தில் அவர்கள் நங்கூரங்களைப் போடுகிறார்கள். அடுத்த நாள் காலையில் ஒரு கரையைப் பார்க்கிறார்கள். அந்தக் கரையை நோக்கி கப்பலைச் செலுத்த அவர்கள் தீர்மானிக்கிறார்கள்.
கரையை நெருங்க நெருங்க, மணலில் கப்பல் சிக்கிக்கொள்கிறது. பிறகு அலைகள் அதன் மீது பலமாய் மோதி கப்பலைத் துண்டு துண்டாக உடைத்து விடுகிறது. படைத் தளபதி எல்லோரையும் பார்த்து: ‘நீந்த முடிந்தவர்கள் எல்லோரும் முதலாவதாகக் கடலில் குதித்து கரைக்கு நீந்திப் போங்கள். மற்றவர்கள் எல்லோரும் அவர்களுக்குப் பின் குதித்து, கப்பலிலிருந்து உடைந்து வரும் மரத்துண்டுகளைப் பிடித்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்கிறார். சொன்னபடியே அவர்கள் செய்கிறார்கள். இவ்வாறு கப்பலில் இருந்த 276 பேரும் அந்தத் தேவதூதன் வாக்குக் கொடுத்தபடியே பத்திரமாய்க் கரைக்குப் போய்ச் சேருகிறார்கள்.
இந்தத் தீவு மெலித்தா என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள மக்கள் ரொம்ப அன்பானவர்கள், கப்பலிலிருந்து வருகிறவர்களை நன்றாய்க் கவனித்துக் கொள்கிறார்கள். வானிலை சற்று சரியான பின், பவுல் மற்றொரு கப்பலில் ஏற்றப்பட்டு ரோமாபுரிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
அப்போஸ்தலர் 27:1-44; 28:1-14.


கேள்விகள்

  • பவுல் பயணம் செய்துகொண்டிருக்கிற கப்பல் கிரேத்தா தீவுக்குப் பக்கத்தில் போகும்போது என்ன நடக்கிறது?
  • கப்பலில் இருப்போரிடம் பவுல் என்ன சொல்கிறார்?
  • அந்தக் கப்பல் எப்படித் துண்டு துண்டாக உடைந்து போகிறது?
  • படைத்தளபதி எல்லோரையும் பார்த்து என்ன சொல்கிறார், எத்தனை பேர் பத்திரமாக கரை சேருகிறார்கள்?
  • அவர்கள் கரை சேருகிற அத்தீவின் பெயர் என்ன, வானிலை சற்று சரியான பின், பவுல் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்?

கூடுதல் கேள்விகள்

  • அப்போஸ்தலர் 27:1-44-ஐ வாசி. ரோமாபுரிக்கு பவுல் கடற்பயணம் செய்தது பற்றி நாம் வாசிக்கையில், பைபிள் பதிவு திருத்தமானது என்ற நம்பிக்கை எப்படிப் பலப்படுகிறது? (அப். 27:16-19, 27-32; லூக். 1:1-4; 2 தீ. 3:16, 17)
  • அப்போஸ்தலர் 28:1-14-ஐ வாசி. அப்போஸ்தலன் பவுலுக்கும் அவருடன் கப்பற்சேதத்தில் மாட்டிக் கொண்டவர்களுக்கும் புற மதத்தவரான மெலித்தா தீவார் ‘அசாதாரண தயவைக்’ காட்டியிருக்கிறார்கள் என்றால், கிறிஸ்தவர்கள் என்ன குணத்தைக் காட்ட வேண்டும், முக்கியமாக எந்த விதத்தில் காட்ட வேண்டும்? (அப். 28:1, 2; எபி. 13:1, 2; 1 பே. 4:9)

தூங்கிவிட்ட ஒரு பையன்

தூங்கிவிட்ட ஒரு பையன்

ஐயோ! அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது? கீழே விழுந்து கிடக்கிற அந்தப் பையனுக்கு ரொம்பவும் அடிபட்டிருக்கிறதா? இதோ பார்! வீட்டுக்குள்ளிருந்து நிறைய பேர் வந்துகொண்டிருக்கிறார்கள், அவர்களோடு பவுல் இருக்கிறார்! தீமோத்தேயுவும் அங்கு இருக்கிறார், தெரிகிறதா? அந்தப் பையன் ஜன்னலிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டானா? 
ஐத்திகுவை உயிர்த்தெழுப்ப பவுல் வருகிறார்

ஆமாம், அதுதான் நடந்திருக்கிறது. பவுல் இங்கே துரோவாவிலுள்ள சீஷர்களுக்கு ஒரு பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தார். அடுத்த நாள் அவர்களையெல்லாம் விட்டு அவர் கப்பலேறிப் போக வேண்டியிருந்தது. எனவே ரொம்ப நாள் கழித்துத்தான் மறுபடியும் அவர்களைப் பார்க்க முடியுமென்பதால் நள்ளிரவு வரை அவர் பேசிக்கொண்டே இருந்தார்.
ஐத்திகு என்ற இந்தப் பையன் ஜன்னலில் உட்கார்ந்தபடியே தூங்கிவிட்டான். தூக்கத்தில் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டான். அதனால்தான் அவர்கள் முகத்தில் அவ்வளவு கவலை தெரிகிறது. அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்று பயப்பட்டார்களோ அதுவே நடந்துவிட்டது. ஆம், அவர்கள் அந்தப் பையனைத் தூக்குகிறபோது அவன் செத்துப்போயிருந்தான்!
பையன் செத்து விட்டான் என்று பவுல் கண்டபோது அவர் அந்தப் பையன் மேல் படுத்து அவனை அணைத்துக் கொள்கிறார். பிறகு, ‘கவலைப்படாதீர்கள், அவன் நன்றாய் இருக்கிறான்!’ என்று சொல்கிறார். அவர் சொன்னது போலவே அவன் உயிரோடு இருக்கிறான்! இது ஓர் அற்புதம்! பவுல் அவனைத் திரும்ப உயிருக்குக் கொண்டு வந்திருக்கிறார்! அங்கிருந்தவர்களுக்கு ஒரே சந்தோஷமாகி விடுகிறது.
அவர்கள் எல்லோரும் மறுபடியுமாக மேல் மாடிக்குப் போய் சாப்பிடுகிறார்கள். பொழுது விடியும் வரை பவுல் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்த முறை ஐத்திகு தூங்கிவிடவில்லை! பிறகு பவுலும், தீமோத்தேயுவும், அவர்களோடு இருப்பவர்களும் படகில் ஏறுகிறார்கள். அவர்கள் எங்கே போகிறார்களென்று உனக்குத் தெரியுமா?
பவுல் இப்போது தன் மூன்றாவது ஊழியப் பயணத்தை முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். இந்த ஊழியப் பயணத்தின்போது பவுல் எபேசுவில் மாத்திரமே மூன்று வருஷங்கள் தங்கியிருந்தார். அதனால் அந்தப் பயணம்தான் அவருடைய இரண்டாவது பயணத்தைவிட நீண்டது என சொல்லலாம்.
துரோவாவை விட்ட பின்பு, அந்தக் கப்பல் மிலேத்துவில் கொஞ்ச நேரம் நிற்கிறது. எபேசு பட்டணம் சில மைல் தூரத்தில்தான் இருப்பதால், அந்தச் சபையிலுள்ள மூப்பர்களிடம் கடைசி தடவையாக பேசுவதற்கு அவர்களை மிலேத்துவுக்கு வரச்சொல்லி பவுல் ஆள் அனுப்புகிறார், அவர்களும் அங்கு வருகிறார்கள். அதன் பிறகு, கப்பல் புறப்படுவதற்கான சமயம் வருகிறது, பவுல் அங்கிருந்து போவதைப் பார்த்து அவர்கள் எல்லோருக்கும் எவ்வளவு வேதனை!
கடைசியில் அந்தக் கப்பல் செசரியாவுக்குப் போய்ச் சேருகிறது. பவுல் இங்கே சீஷனாகிய பிலிப்புவின் வீட்டில் தங்கியிருக்கிறார். அப்போது அகபு என்ற ஒரு தீர்க்கதரிசி பவுலை எச்சரிக்கிறார். அதாவது, பவுல் எருசலேமுக்குப் போகும்போது அங்கே அவர் கைது செய்யப்படுவார் என்று எச்சரிக்கிறார். அவர் சொன்னது போலவே நடக்கிறது. செசரியாவில் இரண்டு வருஷங்கள் பவுல் சிறையில் இருக்கிறார், பிறகு, ரோம ஆட்சியாளன் இராயனுக்கு முன் விசாரணை செய்யப்படுவதற்காக ரோமாபுரிக்கு அனுப்பப்படுகிறார். ரோமாபுரிக்குப் போகிற வழியில் என்ன நடக்கிறதென்று நாம் பார்க்கலாம்.
அப்போஸ்தலர் 19-26 அதிகாரங்கள்.


கேள்விகள்

  • படத்தில் கீழே விழுந்து கிடக்கிற அந்தப் பையன் யார், அவனுக்கு என்ன ஆனது?
  • பையன் செத்து விட்டான் என்று பவுல் கண்டபோது அவர் என்ன செய்கிறார்?
  • பவுலும், தீமோத்தேயுவும், அவர்களோடு இருப்பவர்களும் எங்கே போகிறார்கள், போகிற வழியில் அவர்கள் மிலேத்துவில் நிறுத்தியபோது அங்கு என்ன நடக்கிறது?
  • அகபு என்ற தீர்க்கதரிசி பவுலுக்கு என்ன எச்சரிப்பு கொடுக்கிறார், அவர் எச்சரித்தபடியே எப்படி நடக்கிறது?

கூடுதல் கேள்விகள்

  • அப்போஸ்தலர் 20:7-38-ஐ வாசி. (அ) அப்போஸ்தலர் 20:26, 27-ல் உள்ள பவுலுடைய வார்த்தைகளின்படி, நாம் எவ்வாறு “எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி” சுத்தமாயிருக்க முடியும்? (எசே. 33:8; அப். 18:6, 7)
    (ஆ) போதிக்கும்போது மூப்பர்கள் ஏன் ‘உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ள’ வேண்டும்? (அப். 20:17, 29, 30; தீத். 1:7-9, NW; 2 தெ. 1:13)
  • அப்போஸ்தலர் 26:24-32-ஐ வாசி. இயேசுவிடமிருந்து பெற்றுக்கொண்ட பிரசங்கிக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதற்குப் பவுல் தன்னுடைய ரோம குடியுரிமையை எப்படிப் பயன்படுத்தினார்? (அப். 9:15; 16:37, 38; 25:11, 12; 26:32; லூக். 21:12, 13)