Monday, 9 December 2013

என்றென்றும் வாழ்வது எப்படி

என்றென்றும் வாழ்வது எப்படி

இந்தக் குட்டிப் பெண்ணும் அவளுடைய நண்பர்களும் என்ன வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நீ சொல்ல முடியுமா? ஆம், நீ வாசித்துக் கொண்டிருக்கிற இந்தப் புத்தகத்தை—என்னுடைய பைபிள் கதை புத்தகத்தை—வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, நீ வாசித்துக் கொண்டிருக்கிற கதையைத்தான்—“என்றென்றும் வாழ்வது எப்படி” என்ற இதே கதையைத்தான்—அவர்களும் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். 
ஒரு பையன் படிக்கிறான்

அவர்கள் என்ன கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா? முதலாவதாக, நாம் என்றென்றும் வாழ வேண்டுமானால் யெகோவாவையும் அவருடைய குமாரனான இயேசுவையும் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘என்றென்றும் வாழ்வதற்கான வழி, ஒரே மெய்க் கடவுளையும் அவர் பூமிக்கு அனுப்பின அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்துவையும் பற்றிக் கற்றுக் கொள்வதே.’
யெகோவா தேவனையும் அவருடைய குமாரனான இயேசுவையும் பற்றி நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்? ஒரு வழியானது என்னுடைய பைபிள் கதை புத்தகத்தை முதலிலிருந்து கடைசி வரையாக வாசிப்பதன் மூலமாகும். இது யெகோவாவையும் இயேசுவையும் பற்றி நிறைய சொல்கிறதல்லவா? அதோடு, அவர்கள் செய்திருக்கிற காரியங்களையும் இன்னும் செய்யப் போகிற காரியங்களையும் பற்றி ஏராளமான விஷயங்களைச் சொல்கிறது. ஆனால் இந்தப் புத்தகத்தை வெறுமென வாசித்தால் போதாது, அதைவிட அதிகத்தை நாம் செய்ய வேண்டும்.
தரையில் இருக்கிற இன்னொரு புத்தகத்தைப் பார்க்கிறாயா? அது பைபிள். இந்தப் புத்தகத்தின் கதைகளுக்கு அடிப்படையாய் இருக்கிற பைபிள் வசனங்களை யாரையாவது வாசித்துக் காட்டச் சொல். நாம் எல்லோரும் யெகோவாவுக்கு சரியான முறையில் சேவை செய்வதற்கும் நித்திய ஜீவனைப் பெறுவதற்கும் தேவையான முழு தகவலையும் பைபிள் நமக்குக் கொடுக்கிறது. அதனால் அடிக்கடி பைபிள் படிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்.
என்றாலும் யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிக் கற்றுக்கொள்வது மாத்திரமே போதாது. அவர்களையும் அவர்களுடைய போதகங்களையும் பற்றி நாம் ரொம்பவே அறிந்திருந்தாலும் நித்திய ஜீவன் நமக்கு கிடைக்காமல் போய்விடலாம். அப்படியானால் வேறு எதுவும் நமக்குத் தேவைப்படுகிறதென்று உனக்குத் தெரியுமா?
நாம் கற்றுக்கொள்கிற காரியங்களின்படி வாழ வேண்டும். யூதாஸ்காரியோத்தை உனக்கு நினைவிருக்கிறதா? இயேசு தேர்ந்தெடுத்த 12 அப்போஸ்தலர்களில் இவனும் ஒருவன். யூதாஸுக்கு யெகோவாவையும் இயேசுவையும் பற்றி ஏராளமான அறிவு இருந்தது. என்றாலும் அவனுக்கு என்ன நடந்தது? கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவன் சுயநலவாதியானான். இயேசுவை 30 வெள்ளிக் காசுகளுக்கு காட்டிக் கொடுத்தான். அதனால் யூதாஸுக்கு நித்திய ஜீவன் கிடைக்காது.
  நாம் படித்த கேயாசி என்பவனை உனக்கு நினைவிருக்கிறதா? தனக்குச் சொந்தமில்லாத சில உடைகளையும் பணத்தையும் அடைய அவன் ஆசைப்பட்டான். அதனால் ஒரு பொய் சொன்னான். அதற்காக யெகோவா அவனைத் தண்டித்தார். நாம் அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் போனால் நம்மையும்கூட அவர் தண்டிப்பார்.
என்றாலும், யெகோவாவுக்கு உண்மையாய் சேவை செய்த பல நல்ல ஆட்களும் இருக்கிறார்கள். அவர்களைப் போல் இருக்க நாம் ஆசைப்படுகிறோம் தானே? சிறுவனாகிய சாமுவேல், நாம் பின்பற்றுவதற்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறான். நாம் பார்த்த பிரகாரம், ஆசரிப்புக் கூடாரத்தில் அவன் யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தபோது அவனுக்கு நான்கு அல்லது ஐந்து வயதுதான் ஆகியிருந்தது இல்லையா? அப்படியானால், ரொம்ப சின்னப் பிள்ளையாக இருந்தாலும்கூட யெகோவாவுக்கு நீ சேவை செய்யலாம். 
பைபிள்

நாமெல்லாரும் பின்பற்ற விரும்புகிற நபர் இயேசு கிறிஸ்துதான்.  காட்டப்பட்டபடி அவர் சிறு பையனாக இருந்தபோதுகூட, ஆலயத்தில் மற்றவர்களிடம் பரலோகத் தகப்பனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய முன்மாதிரியை நாம் பின்பற்றுவோமாக. நம்முடைய அருமையான கடவுள் யெகோவாவையும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவையும் பற்றி நம்மால் எவ்வளவு பேருக்கு சொல்ல முடியுமோ அவ்வளவு பேருக்கு சொல்வோமாக. இதையெல்லாம் செய்து வந்தால், கடவுளுடைய புதிய பரதீஸ் பூமியில் நாம் என்றென்றும் வாழ முடியும்.
யோவான் 17:3; சங்கீதம் 145:1-21.


கேள்விகள்

  • என்றென்றும் வாழ வேண்டுமென்றால் நாம் எதைப் பற்றி தெரிந்துகொள்ள வேணடும்?
  • இந்தப் படத்திலுள்ள குட்டிப் பெண்ணையும் அவளுடைய நண்பர்களையும் போல யெகோவா தேவனையும் இயேசுவையும் பற்றி நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
  • இந்தப் படத்தில் பார்க்கிற இன்னொரு புத்தகம் என்ன, அதை நாம் ஏன் அடிக்கடி வாசிக்க வேண்டும்?
  • என்றென்றும் வாழ வேண்டுமானால் யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிக் கற்றுக்கொள்வதோடு வேறு எதுவும் தேவை?
  • கதை 69-லிருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்?
  • கதை 55-ல் பார்த்த குட்டிப் பையனான சாமுவேலின் சிறந்த உதாரணம் நமக்கு என்ன காட்டுகிறது?
  • இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம், அப்போது எதிர்காலத்தில் நம்மால் என்ன செய்ய முடியும்?

கூடுதல் கேள்விகள்

  • யோவான் 17:3-ஐ வாசி. யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றி அறிந்துகொள்வதற்கு வெறுமனே விஷயங்களை மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது என்பதை பைபிள் வசனங்கள் எப்படிக் காட்டுகின்றன? (மத். 7:21; யாக். 2:18-20; 1 யோ. 2:17)
  • சங்கீதம் 145:1-21-ஐ வாசி. (அ) யெகோவாவைத் துதிப்பதற்கான அநேக காரணங்களில் சில யாவை? (சங். 145:8-11; வெளி. 4:11)
    (ஆ) யெகோவா எப்படி ‘எல்லோருக்குமே நல்லவராய்’ இருக்கிறார், இது நம்மை எப்படி அவரிடம் இன்னும் நெருங்கி வரச் செய்கிறது? (சங். 145:9, NW; மத். 5:43-45)
    (இ) யெகோவாவை இருதயப்பூர்வமாக நேசித்தால் நாம் என்ன செய்வோம்? (சங். 119:171, 172, 175; 145:11, 12, 21)

பூமியில் ஒரு புதிய பரதீஸ்

பூமியில் ஒரு புதிய பரதீஸ்

இந்தப் படத்திலுள்ள பெரிய பெரிய மரங்களையும், வண்ண வண்ண பூக்களையும் உயர உயரமான மலைகளையும் பார். எவ்வளவு அழகாக இருக்கிறது இல்லையா? ஒரு மான் இந்தச் சின்ன பையனுடைய கையிலிருந்து எப்படி வாங்கிச் சாப்பிடுகிறது பார். அந்தச் சிங்கங்களையும் பசும்புல்லில் நின்றுகொண்டிருக்கிற அந்தக் குதிரைகளையும் பார். இதுபோன்ற இடத்தில் வீடு கட்டி இருக்க ஆசைப்படுகிறாய் தானே?
பரதீஸாக மாற்றப்பட்ட பூமியில் நீ என்றென்றுமாக வாழ வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். இன்று ஜனங்களுக்கு இருக்கும் எந்த வலியும் வேதனையும் உனக்கு வரக்கூடாது என அவர் நினைக்கிறார். அந்தப் புதிய பரதீஸில் வாழப் போகிறவர்களுக்கு பைபிள் கொடுக்கிற வாக்கு இதுவே: ‘கடவுள் அவர்களோடு கூட இருப்பார். மரணமோ, அழுகையோ, வேதனையோ இனி இருக்காது, பழைய காரியங்களெல்லாம் ஒழிந்து போய்விட்டன.’
இந்த அற்புத மாற்றம் கண்டிப்பாக நடக்கும்படி இயேசு பார்த்துக் கொள்வார். இது எப்பொழுது நடக்குமென்று உனக்குத் தெரியுமா? ஆம், எல்லாக் கெட்ட காரியங்களையும் கெட்ட ஜனங்களையும் நீக்கிவிட்டு பூமியை அவர் சுத்தமாக்கிய பின்பே அது நடக்கும். இயேசு பூமியில் இருக்கும்போது எல்லா வகையான நோய்களிலிருந்தும் மக்களைச் சுகப்படுத்தினார், மரித்தோரையும்கூட உயிர்த்தெழுப்பினார் இல்லையா?
அதையெல்லாம் அவர் ஏன் செய்தார் தெரியுமா? கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக ஆட்சி செய்யும்போது பூமி முழுவதிலும் தாம் என்ன செய்யப் போகிறார் என்பதைக் காட்டவே அவர் அதையெல்லாம் செய்தார். சற்று கற்பனை செய்து பார், பூமியில் அந்தப் புதிய பரதீஸ் எவ்வளவு அருமையாக இருக்கும்! இயேசு, தாம் தேர்ந்தெடுக்கிற சிலரோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்து கொண்டிருப்பார். அந்த ராஜாக்கள் பூமியிலுள்ள ஒவ்வொருவரையும் கவனித்துக்கொள்வார்கள், எல்லோரையும் சந்தோஷமாக வாழ வைப்பார்கள். அந்தப் புதிய பரதீஸில் கடவுள் கொடுக்கப் போகிற நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? அதை இப்போது பார்க்கலாம்.
வெளிப்படுத்துதல் 21:3, 4; 5:9, 10; 14:1-3.
ஒரு பரதீஸ் காட்சி



கேள்விகள்

  • பூமி ஒரு பரதீஸாக மாறும்போது நாம் எதையெல்லாம் அனுபவித்து மகிழ்வோம் என பைபிள் காட்டுகிறது?
  • பரதீஸில் வாழ்வோருக்கு பைபிள் என்ன வாக்குக் கொடுக்கிறது?
  • இந்த அற்புத மாற்றம் எப்போது நடக்கும்படி இயேசு பார்த்துக் கொள்வார்?
  • கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக ஆட்சி செய்யும்போது தாம் என்ன செய்வார் என்பதைக் காட்டுவதற்காக பூமியில் இருந்தபோது இயேசு என்ன செய்தார்?
  • பரலோகத்திலிருந்து இயேசுவும் அவருடன் ஆட்சி செய்பவர்களும் பூமியை ஆளும்போது அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்?

கூடுதல் கேள்விகள்

  • வெளிப்படுத்துதல் 5:9, 10-ஐ வாசி. ஆயிர வருட ஆட்சியின்போது பூமியை ஆளுபவர்கள் அனுதாபமும் இரக்கமுமுள்ள ராஜாக்களும் ஆசாரியர்களுமாய் இருப்பார்கள் என நாம் ஏன் உறுதியாக நம்பலாம்? (எபே. 4:20-24; 1 பே. 1:7; 3:8; 5:6-10)
  • வெளிப்படுத்துதல் 14:1-3-ஐ வாசி. 1,44,000 பேரின் நெற்றிகளில் பிதாவின் பெயரும் ஆட்டுக்குட்டியானவரின் பெயரும் எழுதப்பட்டிருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? (1 கொ. 3:23; 2 தீ. 2:19; வெளி. 3:12)

எல்லாக் கெட்ட காரியங்களுக்கும் முடிவு

எல்லாக் கெட்ட காரியங்களுக்கும் முடிவு

இங்கே நீ என்ன பார்க்கிறாய்? வெள்ளை குதிரைகள் மீது ஒரு படை வந்துகொண்டிருக்கிறது. ஆனால் அந்தக் குதிரைகள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் கவனி. இந்தக் குதிரைகள் மேகங்களின் மேல் பரலோகத்திலிருந்து பாய்ந்து வந்து கொண்டிருக்கின்றன! இவை நிஜமான குதிரைகளா? 
பரலோகத்தில் இயேசு ராஜாவாக இருக்கிறார்

இல்லை, இவை நிஜமான குதிரைகள் இல்லை. இது நமக்கு எப்படித் தெரியுமென்றால், குதிரைகள் மேகங்களின் மேல் ஓட முடியாதல்லவா? ஆனால் பரலோகத்தில் குதிரைகள் இருப்பதாக பைபிள் சொல்கிறது. ஏன் என்று உனக்குத் தெரியுமா?
ஏனென்றால் பூமியில் ஒரு காலத்தில் போர் செய்வதற்கு குதிரைகள் ஏராளமாய் உபயோகப்படுத்தப்பட்டன. ஆகவே பரலோகத்திலிருந்து ஆட்கள் குதிரைகள் மீது வருவது போல பைபிள் சொல்வது பூமியிலுள்ள ஜனங்களுடன் கடவுள் ஒரு போர் செய்ய வேண்டியிருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத்தான். அந்தப் போரின் பெயர் என்னவென்று தெரியுமா? அது அர்மகெதோன். அந்தப் போர் பூமியில் எல்லாக் கெட்ட காரியங்களையும் அழிப்பதற்கே தொடுக்கப்படுகிறது.
அந்த அர்மகெதோன் போரில் தலைமை வகிக்கப் போகிறவர் இயேசுவே. யெகோவா தம்முடைய அரசாங்கத்திற்கு ராஜாவாக இயேசுவையே தேர்ந்தெடுத்தார் என்பது உனக்கு நினைவிருக்கலாம். அதனால்தான் இயேசுவின் தலையில் ராஜ கிரீடம் இருக்கிறது. அவரிடமிருக்கிற அந்த வாள் கடவுளுடைய எதிரிகளையெல்லாம் அவர் கொன்று போடுவார் என்று காட்டுகிறது. எல்லாக் கெட்ட ஆட்களையும் கடவுள் அழிப்பார் என்பதைப் பற்றி நாம் ஆச்சரியப்பட வேண்டுமா?
கதை 10-ஐ திருப்பிப் பார். அங்கே நீ என்ன பார்க்கிறாய்? கெட்ட ஜனங்களை அழித்த அந்தப் பெரிய ஜலப்பிரளயத்தைப் பார்க்கிறாய் அல்லவா? அந்த ஜலப்பிரளயத்தை யார் வர வைத்தது? யெகோவா தேவனே. இப்போது கதை 15-ஐப் பார். அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? யெகோவா அனுப்பிய நெருப்பால் சோதோமும் கொமோராவும் அழிக்கப்படுகின்றன.
கதை 33-க்குத் திருப்பு. எகிப்தியரின் குதிரைகளுக்கும் யுத்த இரதங்களுக்கும் என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று பார். தண்ணீர் திடீரென்று அவர்கள் மேல் புரண்டு மூழ்கும்படி செய்தவர் யார்? யெகோவாவே. தம்முடைய ஜனத்தைப் பாதுகாப்பதற்காக அவர் அதைச் செய்தார். கதை 76-ஐப் பார். யெகோவா, தம்முடைய ஜனமான இஸ்ரவேலரையும் அழித்தார்; ஆம், அவர்கள் கெட்ட காரியங்கள் செய்ததால் அவர்களை அழித்துப் போட்டதை அதில் நீ பார்க்கலாம்.
எனவே, பூமியில் எல்லாக் கெட்ட காரியங்களுக்கும் முடிவைக் கொண்டு வருவதற்காக யெகோவா தம்முடைய பரலோகப் படையை அனுப்பப் போவதைக் குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதே இல்லை. ஆனால் அதன் பிறகு நிலைமை எப்படி இருக்குமென்று கொஞ்சம் யோசித்துப் பார்! இந்தப் பக்கத்தைத் திருப்பு, நாம் அதைப் பார்க்கலாம்.
வெளிப்படுத்துதல் 16:16; 19:11-16.


கேள்விகள்

  • பரலோகத்தில் குதிரைகள் இருப்பதாக பைபிள் ஏன் சொல்கிறது?
  • பூமியிலுள்ள கெட்ட ஆட்களுடன் கடவுள் தொடுக்கப் போகிற அந்தப் போரின் பெயர் என்ன, எதற்காக அந்தப் போர் தொடுக்கப்படுகிறது?
  • இந்தப் படத்தில் பார்க்கிறபடி, யார் அந்தப் போரில் தலைமை வகிப்பார், அவர் ஏன் கிரீடம் அணிந்திருக்கிறார், அவரிடமுள்ள வாள் எதை அர்த்தப்படுத்துகிறது?
  • கதைகள் 10, 15, 33-ல் பார்த்தபடி, கெட்ட ஆட்களைக் கடவுள் அழிப்பார் என்பதைப் பற்றி நாம் ஏன் ஆச்சரியப்பட வேண்டியதில்லை?
  • கெட்ட ஆட்கள் கடவுளை வணங்குவதாக சொன்னாலும் அவர்களைக் கடவுள் அழித்துவிடுவார் என்பதை 36-ம் கதையும் 76-ம் கதையும் எப்படிக் காட்டுகின்றன?

கூடுதல் கேள்விகள்

  • வெளிப்படுத்துதல் 19:11-16-ஐ வாசி. (அ) வெள்ளை குதிரையில் சவாரி செய்பவர் இயேசு கிறிஸ்துவே என்பதை வேதவசனங்கள் எப்படித் தெளிவாகக் காட்டுகின்றன? (வெளி. 1:5; 3:14; 19:11; ஏசா. 11:4)
    (ஆ) இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை இயேசு அணிந்திருப்பது அவருடைய வெற்றி முழுமையானதாக இருக்கும் என்பதை எப்படி உறுதிப்படுத்துகிறது? (வெளி. 14:18-20; 19:13; ஏசா. 63:1-6)
    (இ) இயேசு சவாரி செய்கிற வெள்ளைக் குதிரைக்குப் பின்னால் வருகிற சேனைகளில் யாரும் இருப்பர்? (வெளி. 12:7; 19:14; மத். 25:31, 32)

(8) பைபிள் முன்னறிவிப்பது உண்மையாய் நடக்கிறது

பைபிள் முன்னறிவிப்பது உண்மையாய் நடக்கிறது

பைபிள், கடந்த காலத்தில் நடந்தவற்றைப் பற்றிய உண்மை கதைகளைச் சொல்வதோடு, எதிர்காலத்தில் நடக்கப் போவதைப் பற்றியும் சொல்கிறது. ஆனால் மனிதர்களால் எதிர்காலத்தைப் பற்றி சொல்ல முடியாது. அதனால்தான் பைபிள் கடவுளால் கொடுக்கப்பட்டதென்று நாம் தெரிந்துகொள்கிறோம். எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
 பரதீஸ் காட்சி
கடவுளுடைய ஒரு பெரிய போரைப் பற்றி அது சொல்கிறது. இந்தப் போரின்போது பூமியிலிருந்து எல்லாக் கெட்ட காரியங்களையும் கெட்ட ஜனங்களையும் கடவுள் நீக்கிப்போடுவார், தம்மைச் சேவிக்கிறவர்களையோ அவர் பாதுகாப்பார். கடவுளுடைய ஊழியர்கள் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அனுபவிக்குமாறு ராஜாவான இயேசு கிறிஸ்து பார்த்துக்கொள்வார்; அதுமட்டுமல்ல, இனி அவர்களுக்கு எந்த வியாதியோ மரணமோ வராதபடியும் பார்த்துக்கொள்வார்.
இந்தப் பூமியைக் கடவுள் ஒரு புதிய பரதீஸாக மாற்றப் போகிறார் என்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் இல்லையா? ஆனால் இந்தப் பரதீஸில் நாம் வாழ வேண்டுமானால் நாம் ஏதோவொன்றைச் செய்ய வேண்டும். இந்தப் புத்தகத்தின் கடைசி கதையில், கடவுள் தம்மைச் சேவிக்கிறவர்களுக்கு வைத்திருக்கிற அந்த அதிசயமான காரியங்களை அனுபவித்து மகிழ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வோம். அதனால் பகுதி 8-ஐ வாசித்து எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்.


ரோமாபுரியில் பவுல்

ரோமாபுரியில் பவுல்

பவுலின் கைகளில் கட்டப்பட்டுள்ள அந்தச் சங்கிலியைப் பார், அதோ, அவரைக் காவல் காக்கும் அந்த ரோமப் படைவீரனும் அங்கு இருக்கிறான். பவுல் ரோமாபுரியில் கைதியாக இருக்கிறார். தன்னை என்ன செய்வதென்று ரோம இராயன் தீர்மானிக்கும் வரை அவர் அங்கேயே காத்திருக்க வேண்டியிருக்கிறது. கைதியான அவரைப் போய் பார்க்க ஆட்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
பவுல் ரோமாபுரிக்குப் போய்ச் சேர்ந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, சில யூத தலைவர்கள் தன்னை வந்து பார்க்குமாறு சொல்லி அனுப்புகிறார். அதன்படி, ரோமாபுரியிலுள்ள பல யூதர்கள் வருகிறார்கள். பவுல் அவர்களுக்கு இயேசுவைப் பற்றியும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் பிரசங்கிக்கிறார். பவுல் சொல்வதைச் சிலர் நம்பி கிறிஸ்தவர்களாக ஆகிறார்கள், மற்றவர்கள் நம்புவதில்லை. 
சிறையில் பவுல்

அதோடு, தன்னைக் காவல் காக்கிற வெவ்வேறு படைவீரர்களிடமும் பவுல் பிரசங்கிக்கிறார். தான் இங்கே கைதியாக வைக்கப்பட்ட இரண்டு வருஷங்களில் முடிந்தளவு எல்லோருக்கும் பவுல் பிரசங்கிக்கிறார். இதன் விளைவாக, இராயனுடைய வீட்டாரும் ராஜ்ய நற்செய்தியைக் கேட்கிறார்கள். அப்படிக் கேட்டவர்களில் சிலர் கிறிஸ்தவர்களாக ஆகிறார்கள்.
மேஜையில் எழுதிக்கொண்டிருக்கிற இவர் யார்? உன்னால் ஊகிக்க முடிகிறதா? ஆம், பவுலைப் பார்க்க வந்திருந்த தீமோத்தேயுவே அவர். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிப் பிரசங்கித்ததற்காக அவரும் சிறையில் இருந்திருந்தார். ஆனால் மறுபடியும் விடுதலை ஆகியிருக்கிறார். இங்கே பவுலுக்கு உதவி செய்ய இப்போது வந்திருக்கிறார். அவர் என்ன எழுதுகிறார் என்று உனக்குத் தெரியுமா? நாம் பார்க்கலாம்.
110-ம் கதையில் குறிப்பிடப்பட்ட பிலிப்பி, எபேசு என்ற பட்டணங்கள் உனக்கு நினைவிருக்கிறதா? இந்தப் பட்டணங்களில் கிறிஸ்தவ சபைகளைத் தொடங்க பவுல் உதவி செய்தார். இப்போது சிறையில் இருந்து அந்தக் கிறிஸ்தவர்களுக்கு பவுல் கடிதங்களை எழுதுகிறார். இந்தக் கடிதங்கள் பைபிளில் இருக்கின்றன, அவை எபேசியர், பிலிப்பியர் என்று அழைக்கப்படுகின்றன. பிலிப்பியிலுள்ள தங்கள் கிறிஸ்தவ நண்பர்களுக்கு என்னென்ன எழுத வேண்டுமென்று பவுல் இப்போது தீமோத்தேயுவுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் பிலிப்பியர் பவுலிடம் மிகவும் அன்பாக இருந்திருக்கிறார்கள். இங்கே சிறையிலிருக்கும் அவருக்கு ஒரு பரிசை அனுப்பினார்கள். அதனால் பவுல் அவர்களுக்கு நன்றி சொல்லி எழுதுகிறார். இந்தப் பரிசைக் கொண்டு வந்தவர் எப்பாப்பிரோதீத்து. ஆனால் அவர் ரொம்பவும் உடம்பு சரியில்லாமல் சாகும் நிலைக்கு வந்துவிட்டார். இப்போது சுகமாகி திரும்ப வீட்டுக்குப் போக தயாராக இருக்கிறார். பிலிப்பிக்குத் திரும்பும்போது, பவுலும் தீமோத்தேயுவும் கொடுத்தனுப்புகிற இந்தக் கடிதத்தை அவர் எடுத்துக்கொண்டு போவார்.
சிறையில் இருக்கும்போது பவுல் மேலும் இரண்டு கடிதங்களை எழுதுகிறார், இவை பைபிளில் இருக்கின்றன. ஒன்று கொலோசெ பட்டணத்திலுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டது. அதற்கு என்ன பெயர் என்று உனக்குத் தெரியுமா? அது கொலோசெயர் என்றழைக்கப்படுகிறது. மற்றொன்று பவுலின் நெருங்கிய நண்பரான பிலேமோனுக்கென்றே எழுதப்பட்ட ஒரு கடிதம், இவரும்கூட கொலோசெயில் வாழ்கிறார். இந்தக் கடிதம் பிலேமோனின் வேலைக்காரனான ஒநேசிமுவைப் பற்றியது.
ஒநேசிமு பிலேமோனிடமிருந்து ரோமாபுரிக்கு ஓடி வந்துவிட்டிருந்தார். பவுல் இங்கே சிறையில் இருப்பதை ஒநேசிமு எப்படியோ தெரிந்து கொண்டு அவரைப் பார்க்க வந்தார். அப்போது பவுல் ஒநேசிமுவுக்கு பிரசங்கித்தார். சீக்கிரத்தில் ஒநேசிமுவும் கிறிஸ்தவரானார். இப்பொழுது ஒநேசிமு தான் ஓடி வந்ததைப் பற்றி வருத்தப்படுகிறார். அதனால் இந்தக் கடிதத்தில் பிலேமோனுக்கு பவுல் என்ன எழுதுகிறார் என்று உனக்குத் தெரியுமா?
ஒநேசிமுவை மன்னிக்கும்படி பிலேமோனை பவுல் கேட்டுக்கொள்கிறார்: ‘நான் அவரை உன்னிடம் திரும்ப அனுப்புகிறேன். ஆனால் இப்போது அவர் உன்னுடைய வேலைக்காரன் மட்டும் அல்ல. ஒரு நல்ல கிறிஸ்தவ சகோதரனும்கூட’ என்று பவுல் எழுதுகிறார். ஒநேசிமு கொலோசெக்குத் திரும்பிப்போனபோது இந்த இரண்டு கடிதங்களையும், அதாவது கொலோசெயருக்கும் பிலேமோனுக்கும் எழுதப்பட்ட கடிதங்களைக் கொண்டு போகிறார். தன்னுடைய வேலைக்காரன் கிறிஸ்தவராகி விட்டார் என்று பிலேமோனுக்கு தெரிய வந்ததும் அவர் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.
பிலிப்பியருக்கும் பிலேமோனுக்கும் உண்மையிலேயே ஒரு நல்ல செய்தியை பவுல் எழுதுகிறார். ‘நான் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புகிறேன், ஆனால் சீக்கிரத்தில் நானும்கூட உங்களிடம் வருவேன்’ என்று பிலிப்பியருக்கு எழுதுகிறார். பிலேமோனுக்கு எழுதுகையில், ‘அங்கே தங்குவதற்காக எனக்கு ஓர் இடத்தை தயார் செய்’ என்று எழுதுகிறார்.
பவுல் விடுதலையானதும் பல இடங்களிலுள்ள கிறிஸ்தவ சகோதரர் சகோதரிகளைப் போய்ப் பார்க்கிறார். ஆனால் பிற்பாடு பவுல் மறுபடியும் ரோமாபுரியில் கைது செய்யப்படுகிறார். இந்தத் தடவை தான் கொல்லப்படுவார் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால் தீமோத்தேயுவுக்கு கடிதம் எழுதி சீக்கிரமாய் வருமாறு அவரைக் கேட்கிறார். ‘நான் கடவுளுக்கு உண்மையுள்ளவனாய் இருந்திருக்கிறேன். கடவுள் எனக்கு நிச்சயம் பலனளிப்பார்’ என்று பவுல் எழுதுகிறார். பவுல் கொல்லப்பட்டு ஒரு சில வருஷங்களுக்குப் பிறகு, எருசலேம் மறுபடியுமாக அழிக்கப்படுகிறது. இந்த முறை ரோமர்களால் அழிக்கப்படுகிறது.
பைபிளில் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. வெளிப்படுத்துதல் புத்தகம் உட்பட பைபிளின் கடைசி புத்தகங்களை அப்போஸ்தலனான யோவான் எழுதும்படி யெகோவா தேவன் செய்கிறார். பைபிள் புத்தகமான வெளிப்படுத்துதல் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்கிறது. அப்படியென்றால் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது? அதைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.
அப்போஸ்தலர் 28:16-31; பிலிப்பியர் 1:13; 2:19-30; 4:18-23; எபிரெயர் 13:23; பிலேமோன் 1-25; கொலோசெயர் 4:7-9; 2 தீமோத்தேயு 4:7-9.


கேள்விகள்

  • ரோமாபுரியில் கைதியாக இருக்கிற பவுல் யாரிடம் பிரசங்கிக்கிறார்?
  • இந்தப் படத்தில், மேஜையில் எழுதிக்கொண்டிருப்பவர் யார், பவுலுக்காக அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
  • எப்பாப்பிரோதீத்து என்பவர் யார், அவர் பிலிப்பிக்குத் திரும்பும்போது எதைக் எடுத்துக்கொண்டு போகிறார்?
  • பவுல் தன்னுடைய நெருங்கிய நண்பரான பிலேமோனுக்கு ஏன் கடிதம் எழுதுகிறார்?
  • பவுல் விடுதலையானதும் என்ன செய்கிறார், பிற்பாடு அவர் என்ன செய்யப்படுகிறார்?
  • பைபிளின் கடைசி புத்தகங்களை எழுதுவதற்கு யெகோவா யாரைப் பயன்படுத்துகிறார், வெளிப்படுத்துதல் புத்தகம் எதைப் பற்றி சொல்கிறது?

கூடுதல் கேள்விகள்

  • அப்போஸ்தலர் 28:16-31; பிலிப்பியர் 1:13-ஐ வாசி. ரோமாபுரியில் கைதியாக இருந்தபோது பவுல் தன்னுடைய நேரத்தை எப்படிப் பயன்படுத்தினார், அவரது உறுதியான விசுவாசத்தால் கிறிஸ்தவ சபையில் இருந்தவர்கள் என்ன செய்யத் தூண்டப்பட்டார்கள்? (அப். 28:23, 30; பிலி. 1:14)
  • பிலிப்பியர் 2:19-30-ஐ வாசி. தீமோத்தேயுவையும் எப்பாப்பிரோதீத்துவையும் பற்றி பெருமிதத்துடன் பவுல் சொன்ன வார்த்தைகள் யாவை, பவுலின் முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (பிலி. 2:20, 22, 25, 29, 30; 1 கொ. 16:18; 1 தெ. 5:12, 13)
  • பிலேமோன் 1-25-ஐ வாசி. (அ) எதன் அடிப்படையில் சரியானதைச் செய்யும்படி பிலேமோனை பவுல் அறிவுறுத்தினார், இன்று மூப்பர்களுக்கு இது எவ்வாறு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது? (பிலே. 9; 2 கொ. 8:8; கலா. 5:13)
    (ஆ) சபையிலிருந்த மற்றவர்களின் மனசாட்சியை பவுல் மதித்தார் என்பதை பிலேமோன் 13, 14 வசனங்கள் எப்படிக் காட்டுகின்றன? (1 கொ. 8:7, 13; 10:31-33)
  • இரண்டு தீமோத்தேயு 4:7-9-ஐ வாசி. இறுதிவரை உண்மையோடு நிலைத்திருந்தால் யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார் என அப்போஸ்தலன் பவுல் உறுதியாக நம்பியது போல நாமும் எப்படி நம்பலாம்? (மத். 24:13; எபி. 6:10)

ஒரு தீவில் கப்பற்சேதம்

ஒரு தீவில் கப்பற்சேதம்

அதோ பார்! அந்தக் கப்பல் ஆபத்தில் இருக்கிறது! துண்டு துண்டாக உடைந்து கொண்டிருக்கிறது! தண்ணீருக்குள் குதித்திருக்கிற அந்த ஆட்களை உன்னால் பார்க்க முடிகிறதா? சிலர் ஏற்கெனவே கரைக்கு நீந்தி வந்துவிட்டார்கள். அங்கே வருவது பவுலா? அவருக்கு என்ன நடந்துவிட்டது? நாம் பார்க்கலாம்.
கப்பற்சேதத்திலிருந்து தப்பியவர்கள்
கப்பற்சேதத்திலிருந்து தப்பியவர்கள்

பவுல் இரண்டு ஆண்டுகளுக்கு செசரியாவில் கைதியாக வைக்கப்பட்டிருந்தார் இல்லையா? அதன் பிறகு அவரும் கைதிகள் சிலரும் ஒரு கப்பலில் ஏற்றப்படுகிறார்கள், அவர்கள் ரோமாபுரிக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். கப்பல் கிரேத்தா தீவுக்குப் பக்கத்தில் போகும்போது, ஒரு பயங்கர புயல் காற்று அவர்களைத் தாக்குகிறது. காற்று ரொம்ப ரொம்ப பலமாக அடிப்பதால் அந்த ஆட்களால் கப்பலை சரியான திசையில் செலுத்த முடியவில்லை. பகலில் சூரியனையும் இரவில் நட்சத்திரங்களையும் அவர்களால் பார்க்க முடியவில்லை. இப்படியே பல நாட்கள் செல்கிறது. கடைசியில், அவர்கள் எல்லோருக்கும் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையே இல்லாமல் போய்விடுகிறது.
அந்தச் சமயத்தில் பவுல் எழுந்து நின்று: ‘உங்களில் யாருமே உயிரை இழக்க மாட்டீர்கள். கப்பல் மாத்திரமே சேதமாகும். ஏனென்றால் நேற்று ராத்திரி கடவுளுடைய தூதன் ஒருவர் என்னிடம் வந்து, “பவுலே, பயப்படாதே! ரோம ஆட்சியாளனான இராயனுக்கு முன் நீ நிற்க வேண்டும். உன்னோடு பயணம் செய்கிற எல்லோரையும் கடவுள் காப்பாற்றுவார்” என்று சொன்னார்’ என்கிறார்.
புயல் தொடங்கி 14-வது நாள் நடு ராத்திரியில், தண்ணீரின் ஆழம் குறைந்து கொண்டே வருவதைக் கப்பலோட்டிகள் கவனிக்கிறார்கள்! இருளில் பாறைகள் எவற்றிலாவது கப்பல் மோதி விடுமோ என்ற பயத்தில் அவர்கள் நங்கூரங்களைப் போடுகிறார்கள். அடுத்த நாள் காலையில் ஒரு கரையைப் பார்க்கிறார்கள். அந்தக் கரையை நோக்கி கப்பலைச் செலுத்த அவர்கள் தீர்மானிக்கிறார்கள்.
கரையை நெருங்க நெருங்க, மணலில் கப்பல் சிக்கிக்கொள்கிறது. பிறகு அலைகள் அதன் மீது பலமாய் மோதி கப்பலைத் துண்டு துண்டாக உடைத்து விடுகிறது. படைத் தளபதி எல்லோரையும் பார்த்து: ‘நீந்த முடிந்தவர்கள் எல்லோரும் முதலாவதாகக் கடலில் குதித்து கரைக்கு நீந்திப் போங்கள். மற்றவர்கள் எல்லோரும் அவர்களுக்குப் பின் குதித்து, கப்பலிலிருந்து உடைந்து வரும் மரத்துண்டுகளைப் பிடித்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்கிறார். சொன்னபடியே அவர்கள் செய்கிறார்கள். இவ்வாறு கப்பலில் இருந்த 276 பேரும் அந்தத் தேவதூதன் வாக்குக் கொடுத்தபடியே பத்திரமாய்க் கரைக்குப் போய்ச் சேருகிறார்கள்.
இந்தத் தீவு மெலித்தா என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள மக்கள் ரொம்ப அன்பானவர்கள், கப்பலிலிருந்து வருகிறவர்களை நன்றாய்க் கவனித்துக் கொள்கிறார்கள். வானிலை சற்று சரியான பின், பவுல் மற்றொரு கப்பலில் ஏற்றப்பட்டு ரோமாபுரிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
அப்போஸ்தலர் 27:1-44; 28:1-14.


கேள்விகள்

  • பவுல் பயணம் செய்துகொண்டிருக்கிற கப்பல் கிரேத்தா தீவுக்குப் பக்கத்தில் போகும்போது என்ன நடக்கிறது?
  • கப்பலில் இருப்போரிடம் பவுல் என்ன சொல்கிறார்?
  • அந்தக் கப்பல் எப்படித் துண்டு துண்டாக உடைந்து போகிறது?
  • படைத்தளபதி எல்லோரையும் பார்த்து என்ன சொல்கிறார், எத்தனை பேர் பத்திரமாக கரை சேருகிறார்கள்?
  • அவர்கள் கரை சேருகிற அத்தீவின் பெயர் என்ன, வானிலை சற்று சரியான பின், பவுல் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்?

கூடுதல் கேள்விகள்

  • அப்போஸ்தலர் 27:1-44-ஐ வாசி. ரோமாபுரிக்கு பவுல் கடற்பயணம் செய்தது பற்றி நாம் வாசிக்கையில், பைபிள் பதிவு திருத்தமானது என்ற நம்பிக்கை எப்படிப் பலப்படுகிறது? (அப். 27:16-19, 27-32; லூக். 1:1-4; 2 தீ. 3:16, 17)
  • அப்போஸ்தலர் 28:1-14-ஐ வாசி. அப்போஸ்தலன் பவுலுக்கும் அவருடன் கப்பற்சேதத்தில் மாட்டிக் கொண்டவர்களுக்கும் புற மதத்தவரான மெலித்தா தீவார் ‘அசாதாரண தயவைக்’ காட்டியிருக்கிறார்கள் என்றால், கிறிஸ்தவர்கள் என்ன குணத்தைக் காட்ட வேண்டும், முக்கியமாக எந்த விதத்தில் காட்ட வேண்டும்? (அப். 28:1, 2; எபி. 13:1, 2; 1 பே. 4:9)

தூங்கிவிட்ட ஒரு பையன்

தூங்கிவிட்ட ஒரு பையன்

ஐயோ! அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது? கீழே விழுந்து கிடக்கிற அந்தப் பையனுக்கு ரொம்பவும் அடிபட்டிருக்கிறதா? இதோ பார்! வீட்டுக்குள்ளிருந்து நிறைய பேர் வந்துகொண்டிருக்கிறார்கள், அவர்களோடு பவுல் இருக்கிறார்! தீமோத்தேயுவும் அங்கு இருக்கிறார், தெரிகிறதா? அந்தப் பையன் ஜன்னலிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டானா? 
ஐத்திகுவை உயிர்த்தெழுப்ப பவுல் வருகிறார்

ஆமாம், அதுதான் நடந்திருக்கிறது. பவுல் இங்கே துரோவாவிலுள்ள சீஷர்களுக்கு ஒரு பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தார். அடுத்த நாள் அவர்களையெல்லாம் விட்டு அவர் கப்பலேறிப் போக வேண்டியிருந்தது. எனவே ரொம்ப நாள் கழித்துத்தான் மறுபடியும் அவர்களைப் பார்க்க முடியுமென்பதால் நள்ளிரவு வரை அவர் பேசிக்கொண்டே இருந்தார்.
ஐத்திகு என்ற இந்தப் பையன் ஜன்னலில் உட்கார்ந்தபடியே தூங்கிவிட்டான். தூக்கத்தில் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டான். அதனால்தான் அவர்கள் முகத்தில் அவ்வளவு கவலை தெரிகிறது. அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்று பயப்பட்டார்களோ அதுவே நடந்துவிட்டது. ஆம், அவர்கள் அந்தப் பையனைத் தூக்குகிறபோது அவன் செத்துப்போயிருந்தான்!
பையன் செத்து விட்டான் என்று பவுல் கண்டபோது அவர் அந்தப் பையன் மேல் படுத்து அவனை அணைத்துக் கொள்கிறார். பிறகு, ‘கவலைப்படாதீர்கள், அவன் நன்றாய் இருக்கிறான்!’ என்று சொல்கிறார். அவர் சொன்னது போலவே அவன் உயிரோடு இருக்கிறான்! இது ஓர் அற்புதம்! பவுல் அவனைத் திரும்ப உயிருக்குக் கொண்டு வந்திருக்கிறார்! அங்கிருந்தவர்களுக்கு ஒரே சந்தோஷமாகி விடுகிறது.
அவர்கள் எல்லோரும் மறுபடியுமாக மேல் மாடிக்குப் போய் சாப்பிடுகிறார்கள். பொழுது விடியும் வரை பவுல் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்த முறை ஐத்திகு தூங்கிவிடவில்லை! பிறகு பவுலும், தீமோத்தேயுவும், அவர்களோடு இருப்பவர்களும் படகில் ஏறுகிறார்கள். அவர்கள் எங்கே போகிறார்களென்று உனக்குத் தெரியுமா?
பவுல் இப்போது தன் மூன்றாவது ஊழியப் பயணத்தை முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். இந்த ஊழியப் பயணத்தின்போது பவுல் எபேசுவில் மாத்திரமே மூன்று வருஷங்கள் தங்கியிருந்தார். அதனால் அந்தப் பயணம்தான் அவருடைய இரண்டாவது பயணத்தைவிட நீண்டது என சொல்லலாம்.
துரோவாவை விட்ட பின்பு, அந்தக் கப்பல் மிலேத்துவில் கொஞ்ச நேரம் நிற்கிறது. எபேசு பட்டணம் சில மைல் தூரத்தில்தான் இருப்பதால், அந்தச் சபையிலுள்ள மூப்பர்களிடம் கடைசி தடவையாக பேசுவதற்கு அவர்களை மிலேத்துவுக்கு வரச்சொல்லி பவுல் ஆள் அனுப்புகிறார், அவர்களும் அங்கு வருகிறார்கள். அதன் பிறகு, கப்பல் புறப்படுவதற்கான சமயம் வருகிறது, பவுல் அங்கிருந்து போவதைப் பார்த்து அவர்கள் எல்லோருக்கும் எவ்வளவு வேதனை!
கடைசியில் அந்தக் கப்பல் செசரியாவுக்குப் போய்ச் சேருகிறது. பவுல் இங்கே சீஷனாகிய பிலிப்புவின் வீட்டில் தங்கியிருக்கிறார். அப்போது அகபு என்ற ஒரு தீர்க்கதரிசி பவுலை எச்சரிக்கிறார். அதாவது, பவுல் எருசலேமுக்குப் போகும்போது அங்கே அவர் கைது செய்யப்படுவார் என்று எச்சரிக்கிறார். அவர் சொன்னது போலவே நடக்கிறது. செசரியாவில் இரண்டு வருஷங்கள் பவுல் சிறையில் இருக்கிறார், பிறகு, ரோம ஆட்சியாளன் இராயனுக்கு முன் விசாரணை செய்யப்படுவதற்காக ரோமாபுரிக்கு அனுப்பப்படுகிறார். ரோமாபுரிக்குப் போகிற வழியில் என்ன நடக்கிறதென்று நாம் பார்க்கலாம்.
அப்போஸ்தலர் 19-26 அதிகாரங்கள்.


கேள்விகள்

  • படத்தில் கீழே விழுந்து கிடக்கிற அந்தப் பையன் யார், அவனுக்கு என்ன ஆனது?
  • பையன் செத்து விட்டான் என்று பவுல் கண்டபோது அவர் என்ன செய்கிறார்?
  • பவுலும், தீமோத்தேயுவும், அவர்களோடு இருப்பவர்களும் எங்கே போகிறார்கள், போகிற வழியில் அவர்கள் மிலேத்துவில் நிறுத்தியபோது அங்கு என்ன நடக்கிறது?
  • அகபு என்ற தீர்க்கதரிசி பவுலுக்கு என்ன எச்சரிப்பு கொடுக்கிறார், அவர் எச்சரித்தபடியே எப்படி நடக்கிறது?

கூடுதல் கேள்விகள்

  • அப்போஸ்தலர் 20:7-38-ஐ வாசி. (அ) அப்போஸ்தலர் 20:26, 27-ல் உள்ள பவுலுடைய வார்த்தைகளின்படி, நாம் எவ்வாறு “எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி” சுத்தமாயிருக்க முடியும்? (எசே. 33:8; அப். 18:6, 7)
    (ஆ) போதிக்கும்போது மூப்பர்கள் ஏன் ‘உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ள’ வேண்டும்? (அப். 20:17, 29, 30; தீத். 1:7-9, NW; 2 தெ. 1:13)
  • அப்போஸ்தலர் 26:24-32-ஐ வாசி. இயேசுவிடமிருந்து பெற்றுக்கொண்ட பிரசங்கிக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதற்குப் பவுல் தன்னுடைய ரோம குடியுரிமையை எப்படிப் பயன்படுத்தினார்? (அப். 9:15; 16:37, 38; 25:11, 12; 26:32; லூக். 21:12, 13)

தீமோத்தேயு பவுலின் புது உதவியாளர்

தீமோத்தேயு பவுலின் புது உதவியாளர்

இங்கே அப்போஸ்தலனாகிய பவுலுடன் இருக்கிற இளைஞனின் பெயர் தீமோத்தேயு. அவர் தன் குடும்பத்துடன் லீஸ்திராவில் வாழ்கிறார். அவருடைய அம்மா பெயர் ஐனிக்கேயாள், அவருடைய பாட்டி பெயர் லோவிசாள்.
லீஸ்திராவுக்கு பவுல் மூன்றாவது தடவையாக வந்திருக்கிறார். ஏறக்குறைய ஒரு வருஷத்துக்கு முன் பவுலும் பர்னபாவும் பிரசங்க ஊழியம் செய்வதற்காக இங்கே வந்திருந்தார்கள். இப்போது பவுல் தன் நண்பன் சீலாவுடன் திரும்பவும் வந்திருக்கிறார். 
தீமோத்தேயும் பவுலும்

தீமோத்தேயுவிடம் பவுல் என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்று தெரியுமா? ‘சீலாவோடும் என்னோடும் வருவதற்கு உனக்கு விருப்பமா? ரொம்ப தூரத்திலுள்ள இடங்களுக்குப் போய் பிரசங்கிக்க நீயும் வந்தால் நல்லது’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
‘ஓ, எனக்கு விருப்பமிருக்கிறது’ என்று தீமோத்தேயு பதிலளிக்கிறார். அதனால் சீக்கிரத்திலேயே தீமோத்தேயு தன் குடும்பத்தை விட்டு பவுலுடனும் சீலாவுடனும் போகிறார். இவர்களுடைய பயணத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன், பவுலுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று நாம் பார்க்கலாம். தமஸ்குவுக்குப் போகிற வழியில் இயேசு அவருக்குத் தோன்றி இப்போது ஏறக்குறைய 17 வருஷங்கள் ஆகியிருக்கின்றன.
இயேசுவின் சீஷர்களைத் துன்பப்படுத்த பவுல் தமஸ்குவுக்கு வந்தார் இல்லையா, ஆனால் இப்போது அவரே ஒரு சீஷராக இருக்கிறார்! பிற்பாடு, இயேசுவைப் பற்றி அவர் பிரசங்கிப்பதை விரும்பாத சில எதிரிகள் அவரைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள். ஆனால் சீஷர்கள் அவரை ஒரு கூடையில் வைத்து அந்தப் பட்டணத்து மதிலுக்கு வெளியே இறக்கி விட்டு தப்ப வைத்து விடுகிறார்கள்.
அதன் பிறகு பவுல், அந்தியோகியாவுக்குப் போய் பிரசங்கிக்கிறார். இங்குதான் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் முதன்முதலில் வழங்கப்பட்டது. பின்னர், தொலைதூர நாடுகளுக்குச் சென்று பிரசங்கிப்பதற்காக பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலிருந்து அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் பிரசங்கிக்கிற பட்டணங்களில் ஒன்று லீஸ்திரா, தீமோத்தேயுவின் வீடு இருக்கிற இடம்
ஏறக்குறைய ஒரு வருஷத்துக்குப் பிறகு, பவுல் மறுபடியும் இங்கே லீஸ்திராவுக்கு வந்திருக்கிறார். இப்போது தீமோத்தேயு, பவுல், சீலா மூவருமாக சேர்ந்து எங்கே போகிறார்களென்று உனக்குத் தெரியுமா? இந்த வரைப்படத்தைப் பார், எந்தெந்த இடங்களுக்கு அவர்கள் போகிறார்களென்று நாம் தெரிந்துகொள்ளலாம்.
முதலாவது, அருகிலுள்ள இக்கோனியாவுக்கு போகிறார்கள், பிறகு இரண்டாவது பட்டணமான அந்தியோகியாவுக்குப் போகிறார்கள். அதன் பின், துரோவா வரையில் பயணப்படுகிறார்கள், பிறகு பிலிப்பி, தெசலோனிக்கே, பெரோயா ஆகிய இடங்களுக்குப் போகிறார்கள். இந்த வரைபடத்தில் அத்தேனே பட்டணம் எங்கிருக்கிறது என்று தெரிகிறதா? பவுல் அங்கே பிரசங்கிக்கிறார். அதன் பிறகு அவர்கள் கொரிந்து பட்டணத்திற்கு செல்கிறார்கள், அங்கே தங்கி ஒன்றரை ஆண்டுகள் பிரசங்கிக்கிறார்கள். கடைசியாக, எபேசுவில் கொஞ்ச நாள் தங்கியிருக்கிறார்கள். பின்பு செசரியாவுக்கு படகில் சென்று, அந்தியோகியாவுக்கு மறுபடியும் வருகிறார்கள். அங்கே பவுல் தங்குகிறார்.
அதனால் தீமோத்தேயு, “நற்செய்தியைப்” பிரசங்கிப்பதற்கும் பல கிறிஸ்தவ சபைகளை உருவாக்குவதற்கும் பவுலுக்கு உதவி செய்கிறார்; இதற்காக பல நூற்றுக்கணக்கான மைல் தூரம் பயணம் செய்கிறார். வளர்ந்த பிறகு நீயும் தீமோத்தேயுவைப் போல கடவுளுடைய உண்மையுள்ள ஊழியக்காரனாக/ஊழியக்காரியாக இருப்பாயா?
அப்போஸ்தலர் 9:19-30; 11:19-26; அதிகாரங்கள் 13-17; 18:1-22. 
ஒரு வரைபடம்

1. ரோமாபுரி; 2. மெலித்தா; 3. பெரோயா; 4. தெசலோனிக்கே; 5. கொரிந்து; 6. பிலிப்பி; 7. அத்தேனே; 8. கிரேத்தா; 9. துரோவா; 10. எபேசு; 11. மிலேத்து; 12. கொலோசே; 13. அந்தியோகியா; 14. இக்கோனியா; 15. லீஸ்திரா; 16. சீப்புரு; 17. அந்தியோகியா; 18. செசரியா; 19. யோப்பா; 20. தமஸ்கு; 21. எருசலேம்; 22. மகா கடல் (மத்தியதரைக் கடல்)


கேள்விகள்

  • இந்தப் படத்தில் பார்க்கிற இளைஞனின் பெயர் என்ன, அவர் எங்கே வாழ்கிறார், அவருடைய அம்மா பெயர், பாட்டி பெயர் என்ன?
  • ரொம்ப தூரத்திலுள்ள ஜனங்களுக்குப் போய் பிரசங்கிக்க சீலாவோடும் தன்னோடும் வருவதற்கு விருப்பமா என பவுல் கேட்கும்போது தீமோத்தேயு என்ன சொல்கிறார்?
  • இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்ற பெயர் முதன்முதலில் வழங்கப்பட்ட இடம் எது?
  • பவுலும் சீலாவும் தீமோத்தேயுவும் அந்தியோகியாவிலிருந்து கிளம்பிய பிறகு அவர்கள் சந்திக்கிற சில பட்டணங்கள் யாவை?
  • பவுலுக்கு தீமோத்தேயு எப்படி உதவுகிறார், இன்று இளைஞர்கள் தங்களையே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

கூடுதல் கேள்விகள்

  • அப்போஸ்தலர் 9:19-30-ஐ வாசி. நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு எதிர்ப்பு வந்தபோது அப்போஸ்தலன் பவுல் எப்படி விவேகமாக நடந்துகொண்டார்? (அப். 9:22-25, 29, 30; மத். 10:16)
  • அப்போஸ்தலர் 11:19-26-ஐ வாசி. பிரசங்க வேலை செய்வதற்கு யெகோவாவுடைய ஆவியின் உதவியும் வழிநடத்துதலும் இருக்கிறது என்பதை அப்போஸ்தலர் 11:19-21, 26-ல் உள்ள பதிவு எப்படிக் காட்டுகிறது?
  • அப்போஸ்தலர் 13:13-16, 42-52-ஐ வாசி. எதிர்ப்பைக் கண்டு சீஷர்கள் சோர்ந்துவிடவில்லை என்பதை அப்போஸ்தலர் 13:51, 52 எப்படிக் காட்டுகிறது? (மத். 10:14; அப். 18:6; 1 பே. 4:14)
  • அப்போஸ்தலர் 14:1-6, 19-28-ஐ வாசி. ‘அவர்களை யெகோவாவுக்கு ஒப்புவித்தார்கள்’ என்ற வார்த்தைகள், புதியவர்களுக்கு நாம் உதவுகையில் அவர்களைப் பற்றி வீணாக கவலைப்படாதிருக்க எப்படி உதவுகின்றன? (அப். 14:21-23; 20:32; யோவா. 6:44)
  • அப்போஸ்தலர் 16:1-5-ஐ வாசி. விருத்தசேதனம் செய்துகொள்ள தீமோத்தேயு முன்வந்ததானது, ‘நற்செய்தியின் நிமித்தம் எல்லாவற்றையும் செய்வதன்’ முக்கியத்துவத்தை எப்படி வலியுறுத்துகிறது? (அப். 16:3; 1 கொ. 9:23, NW; 1 தெ. 2:8)
  • அப்போஸ்தலர் 18:1-11, 18-22-ஐ வாசி. பிரசங்க வேலையை வழிநடத்துவதில் இயேசுவுக்கு அக்கறை இருந்ததை அப்போஸ்தலர் 18:9, 10 எப்படிக் குறிப்பாக தெரிவிக்கிறது, இது நமக்கு என்ன உறுதியை அளிக்கிறது? (மத். 28:20)

கொர்நேலியுவை பேதுரு சந்திக்கிறார்

கொர்நேலியுவை பேதுரு சந்திக்கிறார்

அங்கே நிற்பது அப்போஸ்தலனாகிய பேதுரு, அவருக்குப் பின்னால் நிற்பவர்கள் அவருடைய சில நண்பர்கள். ஆனால் அந்த ஆள் ஏன் பேதுருவுக்கு முன் விழுந்து வணங்குகிறார்? அவர் அப்படிச் செய்ய வேண்டுமா என்ன? அவர் யார் என்று உனக்குத் தெரியுமா?
அவருடைய பெயர் கொர்நேலியு. அவர் ஒரு ரோம படைத்தளபதி. பேதுரு யாரென்பது கொர்நேலியுவுக்குத் தெரியாது, ஆனால் அவரைத் தன் வீட்டுக்கு அழைக்குமாறு அவனுக்குச் சொல்லப்பட்டது. இது எப்படி நடந்ததென்று நாம் பார்க்கலாம். 

கொர்நேலியுவை பேதுரு சந்திக்கிறார்


இயேசுவை முதலாவது பின்பற்றியவர்கள் யூதர்கள், ஆனால் கொர்நேலியு ஒரு யூதன் அல்ல. என்றாலும் கடவுளை அவர் நேசிக்கிறார், அவரிடம் ஜெபிக்கிறார், ஜனங்களுக்குப் பல நல்ல காரியங்களைச் செய்கிறார். ஒருநாள் மத்தியான வேளையில், ஒரு தேவதூதன் அவருக்குக் காணப்பட்டு: ‘கடவுள் உன்னைக் கண்டு சந்தோஷப்படுகிறார். உன் ஜெபங்களுக்கு அவர் பதிலளிக்கப் போகிறார். அதனால் சில ஆட்களை அனுப்பி பேதுரு என்பவரை இங்கே அழைத்துவரச் சொல். அவர் யோப்பாவில், கடலோரப் பகுதியிலுள்ள சீமோனின் வீட்டில் தங்கியிருக்கிறார்’ என்று சொல்கிறார்.
கொர்நேலியு உடனடியாக பேதுருவைக் கண்டுபிடிக்க சில ஆட்களை அனுப்புகிறார். மறுநாள், யோப்பாவுக்கு அருகில் அவர்கள் போய்ச் சேர்ந்தபோது, சீமோனுடைய வீட்டின் மேல் மாடியில் பேதுரு இருக்கிறார். அங்கே பரலோகத்திலிருந்து ஒரு பெரிய துணி கீழே வருவதைப் பார்ப்பதைப் போல் பேதுருவைக் கடவுள் நினைக்க வைக்கிறார். அந்தத் துணியில் எல்லா வகையான மிருகங்களும் இருக்கின்றன. கடவுளுடைய சட்டத்தின்படி, இவை சாப்பிடக் கூடாத அசுத்தமான மிருகங்கள், ஆனாலும் ஒரு குரல்: ‘பேதுருவே, எழுந்திரு, இவற்றையெல்லாம் கொன்று சாப்பிடு’ என்று சொல்கிறது.
அதற்கு பேதுரு: ‘மாட்டேன்! அசுத்தமான எதையும் நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை’ என்கிறார். ஆனால் அந்தக் குரல் பேதுருவிடம்: ‘சுத்தமானவை என்று கடவுள் இப்போது சொல்வதை அசுத்தம் என்று இனிமேல் சொல்லாதே’ என்று கூறுகிறது. இப்படியே மூன்று தடவை நடக்கிறது. இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று பேதுரு யோசித்துக் கொண்டிருந்தபோது, கொர்நேலியுவால் அனுப்பப்பட்ட ஆட்கள் அந்த வீட்டுக்கு வந்து பேதுரு இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.
பேதுரு கீழே இறங்கி வந்து: ‘நான்தான் பேதுரு. எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்கிறார். தன் வீட்டுக்கு பேதுருவை அழைக்குமாறு கொர்நேலியுவிடம் ஒரு தேவதூதன் சொன்னதாக அந்த ஆட்கள் விளக்கியபோது அவர்களோடு செல்ல அவர் சம்மதிக்கிறார். அடுத்த நாள் அவரும் அவருடைய நண்பர்களும் செசரியாவில் இருக்கிற கொர்நேலியுவைப் பார்க்கப் புறப்படுகிறார்கள்.
கொர்நேலியு, தன்னுடைய சொந்தக்காரர்களையும் நெருங்கிய நண்பர்களையும் அங்கு வரவழைத்திருக்கிறார். அப்போது பேதுரு உள்ளே வருகிறார், அவர் வந்ததுமே கொர்நேலியு அவரை வரவேற்கிறார். இங்கே நீ பார்க்கிறபடி, பேதுருவின் கால்களில் விழுந்து வணங்குகிறார். உடனே பேதுரு: ‘எழுந்திரு; நானும் ஒரு மனிதன்தான்’ என்று சொல்கிறார். ஆம்! ஒரு மனிதனுக்கு முன் விழுந்து வணங்குவது சரியல்ல என்று பைபிள் காட்டுகிறது. யெகோவாவை மாத்திரமே நாம் வணங்க வேண்டும்.
பேதுரு இப்போது அங்குக் கூடி வந்திருப்பவர்களிடம் பிரசங்கிக்கிறார். பிறகு, ‘கடவுள் தம்மைச் சேவிக்க விரும்புகிற எல்லோரையும் ஏற்றுக்கொள்கிறார் என்பது இப்போது எனக்குப் புரிகிறது’ என்று சொல்கிறார். அப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது கடவுள் தம்முடைய பரிசுத்த ஆவியை அங்கிருந்தோருக்குக் கொடுக்கிறார், உடனே அந்த ஆட்கள் வெவ்வேறு பாஷைகளில் பேசத் தொடங்குகிறார்கள். பேதுருவுடன் வந்த அந்த யூத சீஷர்களுக்கு ஒரே ஆச்சரியமாகி விடுகிறது, ஏனென்றால் யூதருக்கு மாத்திரமே கடவுள் தயவு காட்டுகிறார் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால் எந்த ஒரு ஜாதியாரையும் மற்ற ஜாதியாரைவிட மேலானவர்களாக அல்லது அதிக முக்கியமானவர்களாக கடவுள் கருதுவதில்லை என்பதை இதன் மூலம் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். நாமெல்லோரும் ஞாபகத்தில் வைக்க வேண்டிய விஷயம் இது அல்லவா?
அப்போஸ்தலர் 10:1-48; 11:1-18; வெளிப்படுத்துதல் 19:10.


கேள்விகள்

  • இந்தப் படத்தில் கீழே விழுந்து வணங்குபவர் யார்?
  • கொர்நேலியுவிடம் ஒரு தேவதூதன் என்ன சொல்கிறார்?
  • யோப்பாவிலுள்ள சீமோனுடைய வீட்டின் மேல் மாடியில் பேதுரு இருக்கையில் அவர் எதைப் பார்க்கும்படி கடவுள் செய்கிறார்?
  • தன் கால்களில் விழுந்து வணங்கக் கூடாது என கொர்நேலியுவிடம் பேதுரு ஏன் சொல்கிறார்?
  • பேதுருவுடன் வந்த யூத சீஷர்களுக்கு ஏன் ஆச்சரியமாகி விடுகிறது?
  • கொர்நேலியுவை பேதுரு சந்தித்ததிலிருந்து என்ன முக்கிய பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்?

கூடுதல் கேள்விகள்

  • அப்போஸ்தலர் 10:1-48-ஐ வாசி. ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பது பற்றி அப்போஸ்தலர் 10:42-ல் உள்ள பேதுருவின் வார்த்தைகள் என்ன காட்டுகின்றன? (மத். 28:19; மாற். 13:10; அப். 1:8)
  • அப்போஸ்தலர் 11:1-18-ஐ வாசி. புறஜாதியாரைக் குறித்த யெகோவாவின் நோக்கம் தெளிவானபோது பேதுரு என்ன மனப்பான்மையைக் காட்டினார், அவருடைய மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (அப். 11:17, 18: 2 கொ. 10:5; எபே. 5:17)

தமஸ்குவுக்குப் போகும் வழியில்

தமஸ்குவுக்குப் போகும் வழியில்

தரையில் விழுந்து கிடப்பது யார் என்று உனக்குத் தெரிகிறதா? அவர் சவுல். ஸ்தேவான் மீது கல்லெறிந்த ஆட்களின் மேலங்கியைக் காவல் காத்தவர் இவரே என்பது உனக்கு நினைவிருக்கிறதா? அந்தப் பிரகாசமான ஒளியைப் பார்! இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது?
ஸ்தேவான் கொல்லப்பட்ட பின்பு, இயேசுவின் சீஷர்களைத் துன்பப்படுத்துவதற்காக அவர்கள் எல்லோரையும் சவுல் தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்று அவர்களைத் தரதரவென்று வெளியே இழுத்துப் போய் சிறையில் அடைக்கிறார். சீஷர்களில் பலர் வேறு பட்டணங்களுக்குத் தப்பியோடி அங்கே “நற்செய்தியை” அறிவிக்கத் தொடங்குகிறார்கள். அதனால் இயேசுவின் சீஷர்களைக் கண்டுபிடிக்க சவுல் வேறு பட்டணங்களுக்கும் போகிறார். இப்போது அவர் தமஸ்குவுக்குப் போய் கொண்டிருக்கிறார். ஆனால், வழியில் ஆச்சரியமான ஒன்று நடக்கிறது:
திடீரென்று வானத்திலிருந்து ஒரு ஒளி சவுலைச் சுற்றிப் பிரகாசிக்கிறது. இங்கே நாம் பார்க்கிறபடி, உடனே அவர் தரையில் விழுந்து விடுகிறார். அப்போது ஒரு குரல்: ‘சவுலே, சவுலே! நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?’ என்று கேட்கிறது. சவுலுடன் இருக்கிற ஆட்கள் அந்த ஒளியைப் பார்க்கிறார்கள், அந்தக் குரலையும் கேட்கிறார்கள், ஆனால் சொல்லப்படுவது எதுவுமே அவர்களுக்குப் புரியவில்லை. 

கர்த்தரே, நீர் யார்?’ என்று சவுல் கேட்கிறார்.
‘நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே’ என்று பதில் வருகிறது. இயேசு ஏன் இப்படிச் சொல்கிறார் தெரியுமா? அவருடைய சீஷர்களை சவுல் துன்பப்படுத்தும்போது தம்மையே துன்பப்படுத்துவது போல் அவர் உணருகிறார்.
அதற்கு சவுல்: ‘கர்த்தரே, இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்கிறார்.
எழுந்து தமஸ்குவுக்குப் போ, அங்கே நீ என்ன செய்ய வேண்டுமென்பது உனக்குச் சொல்லப்படும்’ என்று இயேசு சொல்கிறார். சவுல் எழுந்து தன் கண்களைத் திறந்தபோது அவரால் எதையுமே பார்க்க முடியவில்லை. அவர் குருடாகி விட்டார்! அதனால் அவருடன் இருக்கிற ஆட்கள் அவர் கையைப் பிடித்துக்கொண்டு தமஸ்குவுக்கு அழைத்துப் போகிறார்கள்.
இப்போது இயேசு தமஸ்குவிலுள்ள ஒரு சீஷரிடம்: ‘அனனியாவே எழுந்திரு. நேர்த் தெருவு எனப்படும் தெருவுக்குப் போ. யூதாவின் வீட்டில் சவுல் என்பவனைப் பார்க்க வேண்டுமென்று சொல். அவனை என்னுடைய விசேஷ ஊழியனாக நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’ என்று சொல்கிறார்.
இயேசு சொன்னபடியே அனனியா செல்கிறார். சவுலைச் சந்தித்தபோது, அவர் மேல் தன் கைகளை வைத்து: ‘உனக்கு மறுபடியும் கண்பார்வை கிடைப்பதற்காகவும், பரிசுத்த ஆவியால் நீ நிரப்பப்படுவதற்காகவும் கர்த்தர் என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்’ என்று சொல்கிறார். உடனே சவுலின் கண்களிலிருந்து செதில்கள் போன்றவை கீழே விழுகின்றன, விழுந்ததுமே அவருக்குப் பார்வை வந்துவிடுகிறது.
பலதரப்பட்ட தேசத்தாரிடம் போய் பிரசங்கிப்பதற்காக சவுலை கடவுள் மிகப் பெரியளவில் பயன்படுத்துகிறார். சவுல் பிற்பாடு அப்போஸ்தலனாகிய பவுல் என்று அறியப்படுகிறார். இவரைப் பற்றி இன்னும் பல காரியங்களை நாம் படிக்க இருக்கிறோம். ஆனால் அதற்கு முன், பேதுருவை கடவுள் என்ன செய்யச் சொல்லி அனுப்புகிறார் என்பதைப் பார்க்கலாம்.
அப்போஸ்தலர் 8:1-4; 9:1-20; 22:6-16; 26:8-20.


கேள்விகள்

  • ஸ்தேவான் கொல்லப்பட்ட பிறகு சவுல் என்ன செய்கிறார்?
  • தமஸ்குவுக்குப் போகும் வழியில் சவுலுக்கு என்ன ஆச்சரியமான காரியம் நடக்கிறது?
  • சவுலை இயேசு என்ன செய்யச் சொல்கிறார்?
  • அனனியாவிடம் இயேசு என்ன சொல்கிறார், சவுலுக்கு எப்படி மறுபடியும் பார்வை கிடைக்கிறது?
  • சவுல் பிற்பாடு என்ன பெயரில் அறியப்படுகிறார், அவரைக் கடவுள் எப்படிப் பயன்படுத்துகிறார்?

கூடுதல் கேள்விகள்

  • அப்போஸ்தலர் 8:1-4-ஐ வாசி. புதிதாக உருவான கிறிஸ்தவ சபையை அடுத்தடுத்து துன்புறுத்தல்கள் தாக்கியது கிறிஸ்தவம் பரவுவதற்கு எப்படி உதவியது, நம்முடைய காலத்திலும் இது போன்ற என்ன காரியம் நடந்திருக்கிறது? (அப். 8:4; ஏசா. 54:17)
  • அப்போஸ்தலர் 9:1-20-ஐ வாசி. சவுல் செய்ய வேண்டியிருந்த என்ன மூன்று வேலைகளை இயேசு வெளிப்படுத்தினார்? (அப். 9:15; 13:5; 26:1; 27:24; ரோ. 11:13)
  • அப்போஸ்தலர் 22:6-16-ஐ வாசி. நாம் எப்படி அனனியாவைப் போல் இருக்கலாம், அது ஏன் முக்கியம்? (அப். 22:12; 1 தீ. 3:7; 1 பே. 1:14-16; 2:12)
  • அப்போஸ்தலர் 26:8-20-ஐ வாசி. சவுல் ஒரு கிறிஸ்தவராக மாறியது, அவிசுவாசியான கணவனையோ மனைவியையோ உடையவர்களுக்கு எப்படி உற்சாகமளிக்கிறது? (அப். 26:11; 1 தீ. 1:14-16; 2 தீ. 4:2; 1 பே. 3:1-3)

ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படுகிறார்

ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படுகிறார்

இங்கே முழங்கால் படியிட்டிருப்பவர் ஸ்தேவான். இயேசுவின் உண்மையுள்ள ஒரு சீஷர். ஆனால் அவருக்கு இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது பார்! இந்த ஆட்கள் பெரிய பெரிய கற்களை அவர் மேல் எறிகிறார்கள். இப்படியொரு பயங்கரமான காரியத்தை ஏன் செய்கிறார்கள்? அந்தளவுக்கு அவர்கள் ஏன் ஸ்தேவானை வெறுக்கிறார்கள்? நாம் பார்க்கலாம். 
ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படுகிறார்

பல அற்புதங்களைச் செய்ய ஸ்தேவானுக்கு கடவுள் உதவி செய்திருக்கிறார். அதை இந்த ஆட்களால் பொறுக்க முடியவில்லை. ஜனங்களுக்கு ஸ்தேவான் சத்தியத்தைச் சொல்லித் தருவதால் வேண்டுமென்றே அவரைச் சண்டைக்கு இழுக்கிறார்கள். ஆனால் ஸ்தேவானுக்கு கடவுள் நிறைய அறிவைக் கொடுக்கிறார். அந்த ஆட்கள் பொய்யான விஷயங்களைக் கற்பிக்கிறார்கள் என்பதை ஜனங்களுக்கு அவர் எடுத்துச் சொல்கிறார். அதனால் அந்த ஆட்கள் இன்னுமதிக எரிச்சல் அடைகிறார்கள். எனவே, அவரைப் பிடித்து இழுத்து வருகிறார்கள். அதோடு சில ஆட்களை வைத்து அவர் மீது பொய்க் குற்றச்சாட்டுகளையும் சுமத்துகிறார்கள்.
பிரதான ஆசாரியன் ஸ்தேவானைப் பார்த்து: ‘இதெல்லாம் உண்மையா?’ என்று கேட்கிறார். அதற்கு ஸ்தேவான் பைபிளிலிருந்து நல்ல ஒரு பேச்சைக் கொடுக்கிறார். பேச்சின் முடிவில், எப்படி ரொம்ப காலத்திற்கு முன் கெட்ட ஆட்கள் யெகோவாவின் தீர்க்கதரிசிகளை வெறுத்தார்கள் என்று சொல்கிறார். அப்படிச் சொல்லிவிட்டு: ‘நீங்களும் அவர்களைப் போலவே இருக்கிறீர்கள். கடவுளின் ஊழியரான இயேசுவைக் கொலை செய்தீர்கள், கடவுளின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் போனீர்கள்’ என்று சொல்கிறார்.
இதைக் கேட்டதும் அந்தத் மதத் தலைவர்களுக்கு வந்ததே கோபம்! நரநரவென்று தங்கள் பற்களைக் கடிக்கிறார்கள். அப்போது ஸ்தேவான் அண்ணாந்து பார்த்து: ‘இதோ! பரலோகத்தில் கடவுளுடைய வலது பாரிசத்தில் இயேசு நிற்கிறதை நான் பார்க்கிறேன்’ என்று சொல்கிறார். உடனே, அந்த ஆட்கள் தங்கள் காதுகளைப் பொத்திக்கொள்கிறார்கள், பிறகு பாய்ந்து சென்று ஸ்தேவானை நகரத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டு போகிறார்கள்.
அங்கே அவர்கள் தங்களுடைய மேலங்கிகளைக் கழற்றி, சவுல் என்ற வாலிபனிடம் கொடுத்து கவனிக்கச் சொல்கிறார்கள். இங்கே சவுலை நீ பார்க்கிறாயா? பிறகு இந்த ஆட்களில் சிலர் ஸ்தேவான் மேல் கல்லெறியத் தொடங்குகிறார்கள். இவர்களில் சிலர் மதத் தலைவர்களின் பேச்சைக் கேட்டுத்தான் இப்படிச் செய்கிறார்கள் என்பது ஸ்தேவானுக்குத் தெரியும். அதனால் அவர் முழங்கால் படியிட்டு: ‘யெகோவாவே, இந்தக் கெட்ட காரியத்திற்காக இவர்களைத் தண்டியாதேயும்’ என்று கடவுளிடம் ஜெபிக்கிறார். பிறகு செத்துப்போய் விடுகிறார்.
யாராவது உனக்கு ஒரு கெடுதல் செய்தால், பதிலுக்குப் பதில் நீ அவர்களுக்குக் கெடுதல் செய்ய நினைக்கிறாயா, அவர்களுக்குக் கெடுதல் செய்யும்படி கடவுளை வேண்டிக்கொள்கிறாயா? ஸ்தேவான் அப்படிச் செய்யவில்லை, இயேசுவும் அப்படிச் செய்யவில்லை. தங்களை வெறுத்தவர்களைக்கூட அவர்கள் நேசித்தார்கள். அவர்களைப் போலவே நடக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.
அப்போஸ்தலர் 6:8-15; 7:1-60.


கேள்விகள்

  • ஸ்தேவான் யார், என்ன செய்வதற்குக் கடவுள் அவருக்கு உதவி செய்திருக்கிறார்?
  • ஸ்தேவான் எதை எடுத்துச் சொல்வதால் மதத் தலைவர்கள் பயங்கரமாகக் கோபப்படுகிறார்கள்?
  • அந்த ஆட்கள் ஸ்தேவானை நகரத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டு போய் என்ன செய்கிறார்கள்?
  • இந்தப் படத்தில், மேலங்கிகளைக் கவனித்துக்கொண்டு நிற்கிற அந்த வாலிபன் யார்?
  • ஸ்தேவான் மரிப்பதற்கு முன்பு, யெகோவாவிடம் என்ன சொல்லி ஜெபம் செய்கிறார்?
  • நமக்கு எதிராக யாரேனும் தீங்கு செய்தால் ஸ்தேவானைப் போல் நாம் என்ன செய்ய வேண்டும்?

கூடுதல் கேள்விகள்

  • அப்போஸ்தலர் 6:8-15-ஐ வாசி. யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலையை நிறுத்துவதற்காக மதத் தலைவர்கள் என்னென்ன சூழ்ச்சி வேலைகளைச் செய்திருக்கிறார்கள்? (அப். 6:9, 11, 13)
  • அப்போஸ்தலர் 7:1-60-ஐ வாசி. (அ) நியாயசங்கத்திற்கு முன்பாக நற்செய்தியை ஆதரித்து ஸ்தேவான் திறம்பட பேசுவதற்கு எது உதவியது, இந்த உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (அப். 7:51-53; ரோ. 15:4; 2 தீ. 3:14-17; 1 பே. 3:15)
    (ஆ) நம் வேலையை எதிர்ப்பவர்களிடமாக நாம் எப்படிப்பட்ட மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்? (அப். 7:58-60; மத். 5:44; லூக் 23:33, 34)

சிறையிலிருந்து விடுதலை

சிறையிலிருந்து விடுதலை

சிறைச்சாலைக் கதவைத் திறந்துவிட்டுக் கொண்டிருக்கிற அந்தத் தேவதூதனைப் பார். அவர் விடுவித்துக் கொண்டிருக்கிற அந்த ஆட்கள் இயேசுவின் அப்போஸ்தலர்கள். அவர்கள் ஏன் சிறையில் போடப்பட்டிருந்தார்கள்? நாம் பார்க்கலாம்.
இயேசுவின் சீஷர்கள் மீது பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டு கொஞ்ச நாட்கள்தான் ஆகியிருக்கிறது. அப்போது ஒரு சம்பவம் நடக்கிறது: மத்தியான வேளையில் பேதுருவும் யோவானும் எருசலேம் ஆலயத்துக்குப் போகிறார்கள். அங்கு வாசலருகே பிறவி நொண்டி ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். ஆட்கள் தினந்தோறும் அவனைத் தூக்கி வருவார்கள். ஆலயத்துக்குப் போவோர் வருவோரிடமிருந்து அவன் பிச்சை கேட்பான். இன்று பேதுருவும் யோவானும் ஆலயத்திற்கு வருவதைப் பார்க்கிறான், அப்போது அவர்களிடம் பிச்சை கேட்கிறான். இந்த அப்போஸ்தலர்கள் அவனுக்கு என்ன கொடுக்கப் போகிறார்கள்?
ஒரு தேவதூதர் அப்போஸ்தலர்களை விடுவிக்கிறார்

அவர்கள் அங்கே நின்று அந்தப் பிச்சைக்காரனைப் பார்க்கிறார்கள். அப்போது பேதுரு அவனிடம்: ‘இப்போது என்னிடம் பணங்காசு இல்லை, ஆனால் இருப்பதை உனக்குக் கொடுக்கிறேன். இயேசுவின் பெயரில் சொல்கிறேன், எழுந்து நட!’ என்று சொல்லி அவனுடைய வலது கையைப் பிடித்துத் தூக்கி விடுகிறார். உடனே அவன் குதித்தெழுந்து, அங்குமிங்கும் நடக்கத் தொடங்குகிறான். ஜனங்களால் நம்பவே முடியவில்லை, இந்த அற்புதத்தைக் கண்டு அவர்கள் ரொம்பவும் சந்தோஷப்படுகிறார்கள்.
அப்போது பேதுரு: ‘இயேசுவை உயிர்த்தெழுப்பிய கடவுளுடைய அதே சக்தியால்தான் நாங்கள் இந்த அற்புதத்தைச் செய்தோம்’ என்று சொல்கிறார். அவரும் யோவானும் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது சில மதத் தலைவர்கள் அங்கு வருகிறார்கள். இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டதைப் பற்றி பேதுருவும் யோவானும் ஜனங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டு அவர்களுக்குப் பயங்கர கோபம் வருகிறது. அதனால் அவர்களைப் பிடித்து சிறையில் போட்டு விடுகிறார்கள்.
அடுத்த நாள் அந்த மதத் தலைவர்கள் ஒரு பெரிய கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். அங்கு பேதுருவும் யோவானும் கொண்டு வரப்படுகிறார்கள், அவர்கள் சுகப்படுத்திய அந்தப் பிச்சைக்காரனும் அங்கு இருக்கிறான். அப்போது அந்த மதத் தலைவர்கள்: ‘எந்தச் சக்தியால் நீங்கள் இந்த அற்புதத்தைச் செய்தீர்கள்?’ என்று கேட்கிறார்கள்.
‘இயேசுவை உயிர்த்தெழுப்பிய கடவுளின் சக்தியால்தான் சுகப்படுத்தினோம்’ என்று பேதுரு பதிலளிக்கிறார். அந்த மதத் தலைவர்களுக்கு இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை, ஏனென்றால் இந்த அற்புதம் உண்மையில் நடந்தது என்பதை அவர்களால் மறுக்கவே முடியாது. அதனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? இயேசுவைப் பற்றி இனி பேசவே கூடாதென்று அப்போஸ்தலர்களை எச்சரித்து அவர்களை விட்டுவிடுகிறார்கள்.
அதற்குப் பின் வந்த நாட்களிலெல்லாம் இயேசுவைப் பற்றி அப்போஸ்தலர்கள் தொடர்ந்து பிரசங்கித்து வருகிறார்கள், அதோடு நோயுற்றவர்களைச் சுகப்படுத்தியும் வருகிறார்கள். இவர்கள் செய்த அற்புதங்களைப் பற்றிய செய்தி எல்லா இடங்களுக்கும் பரவுகிறது. அதனால், எருசலேமை சுற்றியுள்ள பட்டணங்களிலிருந்துகூட நோயுற்றவர்களை ஜனங்கள் அவர்களிடம் கொண்டு வருகிறார்கள். இதைப் பார்த்த அந்த மதத் தலைவர்களுக்கு அப்போஸ்தலர்கள் மீது பொறாமை பொறாமையாக வருகிறது, அதனால் அவர்களைப் பிடித்து சிறையிலே போட்டு விடுகிறார்கள். ஆனால் ரொம்ப நாட்களுக்கு அவர்கள் அங்கேயே இருப்பதில்லை.
நீ இங்கே பார்க்கிறபடி, ஒருநாள் இராத்திரி தேவதூதன் சிறைச்சாலைக் கதவைத் திறந்து விட்டு, ‘நீங்கள் ஆலயத்துக்குப் போய், ஜனங்களிடம் தொடர்ந்து பிரசங்கம் பண்ணுங்கள்’ என்று சொல்கிறார். மறுநாள் காலை, அந்த மதத் தலைவர்கள் அப்போஸ்தலர்களைக் கொண்டு வரும்படி ஆட்களைச் சிறைச்சாலைக்கு அனுப்புகிறார்கள். ஆனால் அவர்கள் அங்கு இல்லை. அவர்கள் ஆலயத்தில் பிரசங்கித்துக் கொண்டிருப்பது பிற்பாடு அவர்களுக்குத் தெரிய வருகிறது; உடனே அங்குப் போய் அவர்களை நியாயசங்கத்திற்கு இழுத்து வருகிறார்கள்.
அங்கிருந்த மதத் தலைவர்கள் அப்போஸ்தலர்களைப் பார்த்து: ‘இயேசுவைப் பற்றி இனி பிரசங்கிக்கவே கூடாதென்று நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தோம், ஆனால் நீங்கள் எருசலேம் முழுக்க உங்கள் போதகத்தைப் பரப்பியிருக்கிறீர்கள்’ என்று குற்றம்சாட்டுகிறார்கள். அதற்கு அப்போஸ்தலர்கள்: ‘மனிதருக்குக் கீழ்ப்படிவதைவிட, நாங்கள் கடவுளுக்கே கீழ்ப்படிவோம்’ என்று பதிலளிக்கிறார்கள். பிறகு அங்கிருந்து வெளியேறி “நற்செய்தியை” தொடர்ந்து பிரசங்கித்து வருகிறார்கள். நாம் பின்பற்ற வேண்டிய சிறந்த ஒரு முன்மாதிரி அல்லவா?
அப்போஸ்தலர் 3-5 அதிகாரங்கள்.


கேள்விகள்

  • ஒரு மத்தியான வேளையில் பேதுருவும் யோவானும் ஆலயத்துக்குப் போகும்போது என்ன நடக்கிறது?
  • நொண்டியாயிருந்த ஒருவனிடம் பேதுரு என்ன சொல்கிறார், பணத்தைவிட மதிப்புள்ள எதை அவனுக்கு பேதுரு கொடுக்கிறார்?
  • மதத் தலைவர்கள் ஏன் கோபமடைகிறார்கள், பேதுருவையும் யோவானையும் அவர்கள் என்ன செய்கிறார்கள்?
  • மதத் தலைவர்களிடம் பேதுரு என்ன சொல்கிறார், அப்போஸ்தலர்களுக்கு என்ன எச்சரிப்பு கொடுக்கப்படுகிறது?
  • மதத் தலைவர்கள் ஏன் பொறாமைப்படுகிறார்கள், அப்போஸ்தலர்களை இரண்டாவது முறை சிறையில் போடும்போது என்ன நடக்கிறது?
  • அப்போஸ்தலர்களை நியாயசங்கத்துக்கு இழுத்துக் கொண்டுவரும்போது அவர்கள் எப்படிப் பதிலளிக்கிறார்கள்?

கூடுதல் கேள்விகள்

  • அப்போஸ்தலர் 3:1-10-ஐ வாசி. அற்புதங்களைச் செய்வதற்கான வல்லமை நமக்குக் கொடுக்கப்படாவிட்டாலும், ராஜ்ய செய்தியின் மதிப்பைப் புரிந்துகொள்ள அப்போஸ்தலர் 3:6-ல் உள்ள பேதுருவின் வார்த்தைகள் நமக்கு எப்படி உதவுகின்றன?
  • அப்போஸ்தலர் 4:1-31-ஐ வாசி. ஊழியத்தில் எதிர்ப்பைச் சந்திக்கையில், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சகோதரர்களை நாம் எவ்விதத்தில் பின்பற்ற வேண்டும்? (அப். 4:29, 31; எபே. 6:18-20; 1 தெ. 2:2)
  • அப்போஸ்தலர் 5:17-42-ஐ வாசி. கடந்த காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி, யெகோவாவின் சாட்சிகளல்லாத சிலர் பிரசங்க வேலை சம்பந்தமாக எப்படி நியாயத்தன்மை காண்பித்திருக்கிறார்கள்? (அப். 5:34-39)

எருசலேமில் காத்திருக்கும்போது

எருசலேமில் காத்திருக்கும்போது

இங்கே இருக்கிற ஆட்கள் இயேசுவின் சீஷர்கள். அவர் சொன்னதற்குக் கீழ்ப்பட்டு எருசலேமிலேயே தங்கியிருக்கிறார்கள். அதுவும் எல்லோரும் ஒன்றாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு பெரிய சத்தம் அந்த வீடு முழுவதும் கேட்கிறது. வேகமாய் வீசும் பலத்த காற்றின் சத்தத்தைப் போல் அது இருக்கிறது. அப்போது நாக்கு போன்ற நெருப்பு இந்தச் சீஷர்கள் ஒவ்வொருவரின் தலை மீதும் தெரிகிறது. அதை உன்னால் பார்க்க முடிகிறதா? இந்தச் சம்பவத்தை என்னவென்று சொல்லலாம்? 
பரிசுத்த ஆவி முதல் நூற்றாண்டு சீஷர்கள் மீது ஊற்றப்பட்டது

இது ஓர் அற்புதம்! இயேசு பரலோகத்தில் திரும்பவும் தம்முடைய தகப்பனுடன் இருக்கிறார். அங்கிருந்து கடவுளுடைய பரிசுத்த ஆவியை சீஷர்கள் மீது ஊற்றுகிறார். இந்த ஆவி அவர்களை என்ன செய்ய வைக்கிறது தெரியுமா? வெவ்வேறு பாஷைகளில் பேச வைக்கிறது.
பலத்த காற்று அடிப்பது போன்ற அந்தச் சத்தத்தைக் கேட்டு, அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க எருசலேமிலுள்ள நிறைய ஆட்கள் கூடிவருகிறார்கள். பெந்தெகொஸ்தே பண்டிகைக்காக இந்த ஆட்களில் சிலர் மற்ற நாடுகளிலிருந்து இங்கே வந்திருக்கிறார்கள். வந்த இடத்தில் எப்பேர்ப்பட்ட ஆச்சரியம்! கடவுள் செய்திருக்கிற அதிசயமான காரியங்களைப் பற்றி தங்களுடைய பாஷையிலேயே இயேசுவின் சீஷர்கள் பேசுவதைக் கேட்கிறார்கள்.
‘இந்த ஆட்கள் எல்லோரும் கலிலேயர் தானே, அப்படியானால் நம்முடைய தாய் பாஷையிலே பேச இவர்களால் எப்படி முடிகிறது?’ என்று ஒருவருக்கொருவர் ஆச்சரியப்பட்டு கேட்டுக் கொள்கிறார்கள்.
அதற்கு விளக்கமளிக்க பேதுரு இப்போது எழுந்து நிற்கிறார். பிறகு உரக்கப் பேச ஆரம்பிக்கிறார். இயேசு எப்படிக் கொல்லப்பட்டார் என்றும், அவரை யெகோவா எப்படி உயிர்த்தெழுப்பினார் என்றும் அங்குக் கூடிவந்திருப்போரிடம் விளக்குகிறார். ‘இயேசு இப்போது பரலோகத்தில் கடவுளுடைய வலது பக்கத்தில் இருக்கிறார், வாக்குப்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியை ஊற்றியிருப்பது அவரே. அதனால்தான் இந்த அற்புதங்களை உங்களால் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது’ என்று சொல்கிறார்.
பேதுரு இதைப் பற்றியெல்லாம் பேசியதும், ஜனங்களில் பலர் இயேசுவுக்குச் செய்த கொடுமைகளை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறார்கள். ‘இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்கிறார்கள். ‘உங்கள் வாழ்க்கையை மாற்றி நீங்கள் முழுக்காட்டுதல் எடுக்க வேண்டும்’ என்று பேதுரு சொல்கிறார். அதனால் ஏறக்குறைய 3,000 பேர் அன்றைக்கே முழுக்காட்டப்பட்டு இயேசுவின் சீஷர்களாகிறார்கள்.
அப்போஸ்தலர் 2:1-47.


கேள்விகள்

  • இந்தப் படம் காட்டுகிறபடி, எருசலேமில் காத்துக்கொண்டிருந்த இயேசுவின் சீஷர்களுக்கு என்ன நடக்கிறது?
  • பண்டிகைக்காக எருசலேமுக்கு வந்தவர்கள் ஏன் ஆச்சரியம் அடைகிறார்கள்?
  • கூடிவந்த ஜனங்களுக்கு பேதுரு எதைப் பற்றி விளக்குகிறார்?
  • பேதுரு சொன்னதைக் கேட்ட பிறகு ஜனங்கள் எவ்வாறு உணருகிறார்கள், அவர்களை பேதுரு என்ன செய்யச் சொல்கிறார்?
  • பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று எத்தனை பேர் முழுக்காட்டப்படுகிறார்கள்?

கூடுதல் கேள்விகள்

  • அப்போஸ்தலர் 2:1-47-ஐ வாசி. (அ) இயேசுவின் மரணத்திற்கு யூத தேசத்தார் அனைவருமே காரணம் என்பதை அப்போஸ்தலர் 2:23, 36-ல் உள்ள பேதுருவின் வார்த்தைகள் எப்படிக் காட்டுகின்றன? (1 தெ. 2:14, 15)
    (ஆ) வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுவதற்கு பேதுரு எப்படி ஒரு சிறந்த மாதிரி வைத்தார்? (அப். 2:16, 17, 29, 31, 36, 39; கொலோ. 4:6)
    (இ) இயேசு வாக்குக் கொடுத்திருந்த ‘பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களில்’ முதலாவது திறவுகோலை பேதுரு எப்படிப் பயன்படுத்தினார்? (அப். 2:14, 22-24, 37, 38; மத். 16:19)

இயேசு பரலோகத்துக்குத் திரும்பிச் செல்கிறார்

இயேசு பரலோகத்துக்குத் திரும்பிச் செல்கிறார்

நாட்கள் செல்லச் செல்ல, தம்மை பின்பற்றுகிறவர்களுக்குப் பல முறை இயேசு காட்சியளிக்கிறார். ஒருமுறை அவருடைய சீஷர்களில் ஏறக்குறைய 500 பேருக்கு காட்சியளிக்கிறார். அப்போது அவர்களிடம் எதைப் பற்றி பேசுகிறார் என்று தெரியுமா? கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியே பேசுகிறார். இந்த ராஜ்யத்தைப் பற்றி சொல்லித் தருவதற்காகவே இயேசுவை இந்தப் பூமிக்கு யெகோவா அனுப்பினார். உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகும்கூட தொடர்ந்து அவர் அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். 
இயேசு பரலோகத்திற்குச் செல்கிறார்

கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன என்று உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அந்த ராஜ்யம் பரலோகத்தில் இருக்கிற கடவுளுடைய உண்மையான அரசாங்கம். அதில் ராஜாவாக இருப்பதற்கு இயேசுவைத்தான் கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிறார். நாம் ஏற்கெனவே பார்த்தபடி, பசியுள்ளவர்களுக்கு இயேசு உணவளித்தார், நோயுற்றவர்களைச் சுகப்படுத்தினார், செத்துப் போனவர்களையும் உயிர்த்தெழுப்பினார்! இதையெல்லாம் செய்வதன் மூலம் தாம் எப்பேர்ப்பட்ட நல்ல ராஜாவாக இருப்பார் என்பதை அவர் காட்டினார்.
அப்படியானால், இயேசு பரலோகத்திலிருந்து ஆயிரம் வருடம் ஆட்சி செய்யும்போது பூமி எப்படி இருக்கும் என்று நினைக்கிறாய்? முழு பூமியும் ஓர் அழகிய பரதீஸாக மாறியிருக்கும். அப்போது யுத்தங்களோ தீய செயல்களோ, நோயோ இருக்காது. மரணம்கூட இருக்காது. இது நிஜம். ஏனென்றால் இந்தப் பூமி ஒரு பரதீஸாக மாறி, அதில் மனிதர்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காகவே கடவுள் அதைப் படைத்தார். அதனால்தான் தொடக்கத்தில் ஏதேன் தோட்டத்தை அவர் உண்டாக்கினார். ஆகவே, என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கடவுள் விரும்புகிறாரோ அதையெல்லாம் இயேசு செய்து முடிப்பார்.
இப்போது இயேசு பரலோகத்துக்குத் திரும்பிப் போகும் சமயம் வருகிறது. 40 நாட்களாக இயேசு தமது சீஷர்களுக்குக் காட்சியளிக்கிறார். எனவே, அவர் உயிரோடிருக்கிறார் என்பதில் அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் சீஷர்களை விட்டுப்போவதற்கு முன் அவர்களைப் பார்த்து: ‘நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளும் வரை எருசலேமிலேயே தங்கியிருங்கள்’ என்று சொல்கிறார். பரிசுத்த ஆவி என்பது கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி. வீசும் காற்றைப் போன்றது அது. கடவுளுடைய விருப்பத்தின்படி செய்ய இயேசுவின் சீஷர்களுக்கு அது உதவி செய்யும். கடைசியாக: ‘பூமியின் கடைசி எல்லை வரைக்கும் நீங்கள் என்னைப் பற்றி சாட்சி கொடுக்க வேண்டும்’ என்கிறார்.
இயேசு இதைச் சொல்லி முடித்ததும் ஆச்சரியமான ஒரு காரியம் நடக்கிறது. நீ இங்கே பார்க்கிறபடி, அவர் பரலோகத்துக்குப் போகத் தொடங்குகிறார். அப்படி அவர் போகப் போக ஒரு மேகம் அவரை மறைத்து விடுகிறது. அதன் பிறகு சீஷர்களால் அவரைப் பார்க்க முடியவில்லை. இயேசு பரலோகத்துக்குப் போய்விடுகிறார், பூமியிலிருக்கும் தமது சீஷர்கள் மீது அங்கிருந்தே ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறார். 
சீஷர்கள் வானத்தை உற்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

1 கொரிந்தியர் 15:3-8; வெளிப்படுத்துதல் 24:3, 4; அப்போஸ்தலர் 1:1-11.


கேள்விகள்

  • ஒருமுறை எத்தனை சீஷர்களுக்கு இயேசு காட்சியளிக்கிறார்? அப்போது அவர்களிடம் எதைப் பற்றி பேசுகிறார்?
  • கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன, இயேசு பரலோகத்திலிருந்து ஆயிரம் வருடம் ஆட்சி செய்யும்போது பூமி எப்படி இருக்கும்?
  • இயேசு தம் சீஷர்களுக்கு எத்தனை நாட்களாக காட்சி அளித்துக்கொண்டிருந்தார், இப்போது அவர் என்ன செய்யப் போகிறார்?
  • இயேசு தம் சீஷர்களை விட்டுப்போவதற்கு முன், அவர்களை என்ன செய்யச் சொல்கிறார்?
  • இந்தப் படத்தில் என்ன நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறாய், அவர் எப்படி அவர்களுடைய கண்களுக்கு மறைவாகி விடுகிறார்?

கூடுதல் கேள்விகள்

  • ஒன்று கொரிந்தியர் 15:3-8-ஐ வாசி. இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி அப்போஸ்தலன் பவுலால் ஏன் அவ்வளவு உறுதியாக பேச முடிந்தது, என்னென்ன விஷயங்களைப் பற்றி இன்று கிறிஸ்தவர்களால் உறுதியுடன் பேச முடியும்? (1 கொ. 15:4, 7, 8; ஏசா. 2:2, 3; மத். 24:14; 2 தீ. 3:1-5)
  • அப்போஸ்தலர் 1:1-11-ஐ வாசி. அப்போஸ்தலர் 1:8-ல் முன்னறிவித்துள்ளபடி, பிரசங்க வேலை எந்தளவு விரிவாக நடைபெற்றது? (அப். 6:7; 9:31; 11:19-21; கொலோ. 1:23)