பயப்படாத ஒரு மனிதன்
இந்த வாலிபனைக் கேலி செய்யும் ஆட்களைப் பார்.
இவர் யார் என்று உனக்குத் தெரியுமா? இவர் எரேமியா. கடவுளுடைய முக்கியமான
ஒரு தீர்க்கதரிசி.
யோசியா ராஜா விக்கிரகங்களைத் தேசத்திலிருந்து அழித்துப்போடத் தொடங்கிய
சிறிது காலத்திற்குப் பிறகு, யெகோவா எரேமியாவைத் தீர்க்கதரிசியாக இருக்கச்
சொல்கிறார். ஆனால் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க தனக்கு வயது போதாதென்று
எரேமியா நினைக்கிறார். ஆனால் அவருக்கு யெகோவா உதவி செய்வதாகக் கூறுகிறார்.
![]() |
எரேமியாவைப் பார்த்து மக்கள் கேலிசெய்கிறார்கள் |
கெட்ட காரியங்களை விட்டுவிடும்படி இஸ்ரவேலருக்கு எரேமியா சொல்கிறார்.
‘மற்ற தேசத்து ஜனங்கள் வணங்குகிற கடவுட்களெல்லாம் பொய்க் கடவுட்கள்’ என்று
அவர் சொல்கிறார். என்றாலும் இஸ்ரவேலரில் பலர், உண்மையான கடவுளான
யெகோவாவைவிட, விக்கிரகங்களையே வணங்க விரும்புகிறார்கள். அவர்களுடைய கெட்ட
நடத்தைக்காக கடவுள் அவர்களைத் தண்டிப்பார் என்று எரேமியா அந்த
ஜனங்களுக்குச் சொல்கிறபோது அவர்கள் ஏளனமாக சிரிக்கிறார்கள்.
பல
ஆண்டுகள் கடந்து செல்கின்றன. யோசியா மரிக்கிறார், மூன்று மாதங்களுக்குப்
பிறகு அவருடைய மகன் யோயாக்கீம் ராஜாவாகிறார். எரேமியா ஜனங்களைப் பார்த்து:
‘நீங்கள் உங்களுடைய கெட்ட வழிகளை விட்டுவிடாவிட்டால் இந்த எருசலேம் நகரம்
அழிக்கப்படும்’ என்ற செய்தியைத் தொடர்ந்து அறிவித்து வருகிறார். அதனால்
ஆசாரியர்கள் அவரைப் பிடித்து: ‘இப்படிச் சொன்னதற்காக நீ கொல்லப்பட
வேண்டும்’ என்று கத்துகிறார்கள். பிறகு, இஸ்ரவேலின் பிரபுக்களிடம்:
‘எரேமியா நம்முடைய நகரத்துக்கு விரோதமாகப் பேசியதால் அவனைக் கொல்ல
வேண்டும்’ என்று சொல்கிறார்கள்.
எரேமியா இப்போது என்ன செய்யப்
போகிறார்? அவர் பயப்படுவதில்லை! ‘இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லச் சொல்லி
யெகோவாதான் என்னை அனுப்பினார். உங்களுடைய கெட்ட வாழ்க்கையை விட்டு நீங்கள்
மாறாவிட்டால் எருசலேமை யெகோவா அழித்துப்போடுவார். நீங்கள் என்னைக்
கொல்கிறீர்கள் என்றால், எந்தத் தப்பும் செய்யாத ஒரு அப்பாவியைத்தான்
கொல்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள்’ என்று சொல்கிறார்.
அந்தப் பிரபுக்கள் எரேமியாவை கொல்லாமல் விட்டுவிடுகிறார்கள், ஆனால்
இஸ்ரவேலர் தங்கள் கெட்ட வழிகளை விட்டுவிடவில்லை. பிற்பாடு பாபிலோனிய
ராஜாவான நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு விரோதமாய் போர் செய்து, இஸ்ரவேலரைத்
தன்னுடைய வேலைக்காரர்களாக ஆக்கிக்கொள்கிறான். ஆயிரக்கணக்கானோரை அவன்
பாபிலோனுக்குக் கொண்டு போகிறான். முன்பின் தெரியாத ஜனங்கள் உன்னை உன்
வீட்டிலிருந்து பிரித்து வேறொரு நாட்டுக்குக் கொண்டு போனால் உனக்கு
எப்படியிருக்குமென்று சற்று யோசித்துப் பார்!
எரேமியா 1:1-8; 10:1-5; 26:1-16; 2 இராஜாக்கள் 24:1-17.
கேள்விகள்
- படத்திலுள்ள வாலிபன் யார்?
- ஒரு தீர்க்கதரிசியாக ஆகப்போவதைப் பற்றி எரேமியா என்ன நினைக்கிறார், ஆனால் அவரிடம் யெகோவா என்ன கூறுகிறார்?
- ஜனங்களிடம் என்ன செய்தியை எரேமியா தொடர்ந்து அறிவிக்கிறார்?
- எரேமியா தீர்க்கதரிசனம் சொல்வதைத் தடுக்க ஆசாரியர்கள் என்ன செய்கிறார்கள், தனக்குப் பயமே இல்லை என்பதை அவர் எப்படிக் காட்டுகிறார்?
- இஸ்ரவேலர் கெட்ட வழிகளிலிருந்து திருந்தாமல் போகும்போது என்ன நடக்கிறது?
கூடுதல் கேள்விகள்
- எரேமியா 1:1-8-ஐ வாசி. (அ) எரேமியாவின் உதாரணம் காட்டுகிறபடி, ஒருவர் யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கான தகுதியைக் கொடுப்பது யார்? (2 கொ. 3:5, 6)
(ஆ) இன்று கிறிஸ்தவ இளைஞர்களுக்கு எரேமியாவின் உதாரணம் என்ன உற்சாகத்தை அளிக்கிறது? (பிர. 12:1; 1 தீ. 4:12)
- எரேமியா 10:1-5-ஐ வாசி. விக்கிரகங்களை நம்புவது வீண் என்பதைக் காட்ட என்ன வலிமையான உதாரணத்தை எரேமியா பயன்படுத்துகிறார்? (எரே. 10:5; ஏசா. 46:7; ஆப. 2:19)
- எரேமியா 26:1-16-ஐ வாசி.
(அ) இன்று எச்சரிப்பின் செய்தியை அறிவிக்கையில், “ஒரு வார்த்தையையும்
குறைத்துப் போடாதே” என எரேமியாவுக்குக் கொடுத்த யெகோவாவின் கட்டளைக்கு
அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர் எப்படிக் கவனம் செலுத்துகிறார்கள்? (எரே.
26:2; உபா. 4:2; அப். 20:27)
(ஆ) தேசங்களுக்கு யெகோவாவின் எச்சரிப்பை அறிவிப்பதில் இன்று யெகோவாவின் சாட்சிகளுக்கு எரேமியா என்ன சிறந்த முன்மாதிரியை வைக்கிறார்? (எரே. 26:8, 12, 14, 15; 2 தீ. 4:1-5)
- இரண்டு இராஜாக்கள் 24:1-17-ஐ வாசி. யூதா ஜனங்கள் யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாய் ஆனதால் அவர்களுக்கு என்னென்ன கஷ்டங்கள் வந்தன? (2 இரா. 24:2-4, 14)
No comments:
Post a Comment